உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Wednesday, December 30, 2009

விடைகொடுத்து.. வரவேற்கிறோம்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எனது பதிவுகளால் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் எனது இதற்கு முந்தைய "தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புதுவழி சங்க்காவின் சாதுரியம்" என்ற தலைப்பிலமைந்த பதிவானது இலங்கையணி மீது சேறு பூசுவதாக அமைந்துள்ளது என நான் அதிகம் மதிக்கும் எனது ஊடகத் துறையிலும், வலைத் துறையிலும் குருநாதராக இருக்கும் மதிப்புக்குரிய
திரு A . R .V .லோஷன் அவர்கள் தனது கருத்துரையின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்தப் பதிவின் தலைப்பு இலங்கையணி ரசிகர்களை சீண்டியது என்பது உண்மைதான். எனவே மேற்படி தலைப்புக்காக வருந்துகிறேன். இந்தத் தலைப்பால் அசெளகரியங்களுக்கு உள்ளான இலங்கை அணி ரசிகர்களை மன்னிக்க வேண்டுகிறேன்.. மேலும் இனிவருங் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுவேனெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்...

சரி, நிலைமை இவ்வாறு இருக்க ஒரு பிரபல தனியார் தமிழ் வானொலியில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு பற்றிய கருத்துக் கணிப்பின் உந்துதலால் எனது மனக் கிடைக்கைகளைக் கொட்டி இந்த 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து புதிய 2010 ஆம் ஆண்டை வரேவேற்கும் முகமாக ஒரு அவசரப்பதிவாக இதனைத் தருகின்றேன்.

உண்மையில் ஒவ்வொரு ஆண்டிலும் இன்பங்களும், துன்பங்களும் வரும் என்றாலும் 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வாழ்வில் சொல்லணா துயரங்களைத் தந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு எனது பார்வையில் மிகவும் மோசமான ஒரு ஆண்டு. கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் நீரூற்றி வளர்த்த விருட்சத்தை வேரோடு சாய்த்த 2009 ஆம் ஆண்டை நான் வெறுக்கிறேன். எமது உறவுகளின் உயிர்களை வகை தொகையின்றி வாரிக் குடித்த இந்த ஆண்டு ஏன் வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் இந்த ஆண்டில் இழந்தவை ஏராளம் ஆனால் பெற்றவை என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று இலங்கையில் உள்ள தமிழர்களை அடிமைகள் என்கின்ற நிலைக்கு கொண்டு வந்த ஆண்டு இது. வெறுமைகளையும், ஏமாற்றங்களையும் ஏராளமாக அள்ளித் தந்த 2009 ஆம் ஆண்டே உனக்கு விடைகொடுக்கின்றோம்.
சரி 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்தால் அடுத்து என்ன 2010 ஆம் ஆண்டு வரப்போகின்றது.. வருக!! வருக!! 2010 . நீயாவது நமது வாழ்வில் ஒளியேற்றுவாய் என்கின்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் உன்னை வரவேற்கிறோம். வந்து எம் வாழ்வில் வசந்தம் தருவாய் என்று அன்போடு வரவேற்கிறோம். அந்தவகையில் மலரப்போகும் 2010 ஆம் ஆண்டு எமக்கான இனிய எதிர்காலத்தின் புதிய ஆரம்பமாக அமையட்டும்.

என் வலைத் தளத்துக்கு வந்து செல்லும் வாசகர்களுக்கும், கருத்துரைகளால் உற்சாகமூட்டும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இதயங் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டிலும் எனது பார்வைகளும், பதிவுகளும் உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் தொடரும்.

Sunday, December 27, 2009

தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புது வழி சங்காவின் சாதுரியம்!!

இலங்கை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய டெஸ்ட்,20 -20 ,ஒரு நாள் தொடர்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளன. அந்தவகையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை ஒன்றைத்தானும் வெல்ல முடியாமல்போனதுடன் ஒரு போட்டியை சமன் செய்திருந்தது. இருந்தபோதிலும் 20 -20 போட்டியில் இலங்கை ஒருபோட்டியில் வெற்றிபெற்று தொடரை சமநிலை செய்தது. மேலும் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3 -1 என்ற கணக்கில் வென்று தொடரை வெற்றிகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டி மோசமான ஆடுகளம் என்ற இலங்கையனித் தலைவர் குமார் சங்கக்காரவின் புகாரையடுத்து 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் டில்லியில் இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

எனவே முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கையணி 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட நிலையில் 5 விக்கட்டுகளை இழந்து 85 ஓட்டங்களை பெற்று தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் அணியின் தலைவர் சங்கக்காரவினால் டில்லி மைதானம் மோசமானது என்கின்ற புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இன்றைய போட்டியில் இலங்கையணி வீரர்கள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அந்தவகையில் நான்காவது ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தரங்க போட்டியின் முதலாவது பந்துவீச்சிலையே ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். உண்மையில் இதன் காரணமாக இலங்கையணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். இருந்தபோதிலும் நான்காவது போட்டியில் சொதப்பியவர்களும், இரவு நேர மதுபான விடுதிச் சர்ச்சையில் சிக்கியவர்க்களுமான டில்ஷான், சனத் ஜெயசூரிய ஆகிய இருவரும் இந்தப்போட்டியில் கொஞ்சம் நிதானமாக செயற்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இதில் சனத் இலங்கையணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக 31 ஓட்டங்களையும், டில்ஷான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய எந்தவொரு வீரரும் இலங்கையணி சார்பில் 20 ஓட்டங்களைக் கடக்கவில்லை. உதிரிகளாக இந்தியணியினரால் 10 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இன்னுமொரு முக்கியமான விடயம் இன்றையதினம் இலங்கையணி சார்பாக தனது முதலாவது ஒரு நாள்போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட முதுமலிங்க புஷ்பகுமார ஆட்டம் கைவிடப்படும்போது ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இன்றையபோட்டியில் இலங்கையணியின் சராசரி ஓட்டப்பெறுமானம் 3 .53 ஆகக் காணப்பட்டது.

இந்தியணி சார்பாக இன்றைய தினம் சஹீர்ஹான் 8 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 31 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இன்றைய தினம் தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட சுதீப் தைகி 6 .3 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 15 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். ஹர்பஜன்சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். நேஹரா 5 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்களைக்கொடுத்த போதிலும் எந்தவித விக்கட்டினையும் அவரால் வீழ்த்த முடியாமல்போனது.

இந்தியஅணியின் பந்து வீச்சு இவ்வாறு இருக்க இன்றைய போட்டி கைவிடப்பட்டமையால் மோசமான ஒரு தோல்வியிலிருந்து இலங்கையணி தப்பியதாக சொல்லிக்கொள்ள முடியும். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அதாவது டில்லி ஆடுகளம் மோசமானது என்பது சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது??? மேலும் இன்றையபோட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படாத ஒரு போட்டி என்றாலும் கொஞ்சம் விறுவிறுப்பான போட்டியாக இருக்குமென்றே பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஏமாற்றியது இலங்கையணி... சரி இனி வங்கதேசத்தில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரிலாவது இந்தியாவை இலங்கை பழிதீர்க்குமா??? வழமைபோல பொறுத்திருந்துதான் பார்ப்போமே!!!

Saturday, December 26, 2009

ஐந்தாண்டுகள் அசைந்தோடியும் உள்ளம் இன்றும் அழுகிறது...

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்த நாள் ஏன் வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம் நமது உறவுகளின் உயிர்களைக் குடித்த ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த வேளையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னரும், அதற்கு பின்னரும் நிகழ்ந்த பல சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

அப்போது நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் கல்லூரி (வித்தியானந்தக் கல்லூரி) முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து கிட்டத்தாட்ட ஐந்து ஆறு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருக்கும் முள்ளியவளை என்னும் இடத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்திருந்தது. அந்த வகையில் பெரும்பாலும் முல்லைத்தீவையும் அதனை அண்டிய கரையோர கிராமங்களிலும் வசித்த பெரும்பாலான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்காக வித்தியானதக் கல்லூரிக்கே வருவதுண்டு.

இவ்வாறாக எமது வகுப்பில் கள்ளப்பாட்டு (கல்விப்பாடு) கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் நாங்கள் சாதாரண தரம் படிக்கும்போதே எமது வகுப்பில் வந்து இணைத்திருந்தார்கள். பின்னர் உயர்தரத்திலும் அவர்கள் எமது பிரிவிலையே (உயிரியல் பிரிவு) தொடர்ந்தார்கள். அவர்கள் இருவரும் கல்வியில் மிகுந்த ஆர்வமுடையவர்கள் என்பதுடன் இருவருமே கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். (இங்கு அவர்கள் கிறிஸ்தவ சமயத்தவர்கள் என்று குறிப்பிடுவதால் மத ரீதியான வேற்றுமை காட்டுவதாக அர்த்தம் கொள்ளவேண்டாம்.) எனவே 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகைக்காக எங்களை அழைத்திருந்தார்கள்.

மிகுந்த சந்தோஷத்துடன் அவர்களின் வீட்டிற்கு உந்துருளியில் ஆண்களும் ஈருருளியில் பெண்களும் என பெரும்பாலான வகுப்பு உறவுகள் அனைவரும் கள்ளப்பாட்டு கிராமத்திற்கு சென்றோம். அன்றுதான் நான் முதன்முதலாக அந்தக் கிராமத்துக்கு சென்றிருந்தேன். கள்ளப்பாடு யுத்தத்தின் பிடிக்குள் சிக்குண்டு அப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ச்சியடையத் தொடங்கிக் கொண்டிருந்தது. பாதைகள் பல செப்பனிடப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனாலும் கள்ளப்பாட்டின் அழகே தனி அழகுதான் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அமைதியான ஒரு கிராமமாக காட்சி தந்தது. உண்மையில் கள்ளப்பாடு என்பது அந்தக் கிராமத்தின் திரிபடைந்த ஒரு பெயர் என்றே நான் அறிகிறேன். அதாவது பல கல்விமான்கள் வாழ்ந்த இடமென்பதால் அந்த இடத்துக்கு கல்விப்பாடு என்றே பெயர் வழங்கப்பட்டிருந்தது. எனினும் பின்நாளில் அது கள்ளப்பாடு எனப் பெயர் மாறிப்போனது.

அன்று நாங்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கள்ளப்பாட்டுக்குள் கால்பதித்தோம். ஒரு சந்தோஷமான பண்டிகை. அதாவது மக்களின் பாவங்களைப் போக்க ஜேசு பாலன் பூமியில் அவதரித்த நாள். பெரும்பாலான கிறிஸ்தவ மக்களால் மட்டுமன்றி எல்லோராலும் கொண்டாடப்படுக் கொண்டிருந்தது. அன்று முதலில் நாங்கள் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 100 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த நண்பன் ஒருவனின் வீட்டுக்கு சென்றோம். அங்கேதான் எங்களுக்கு மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த நண்பனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து அப்படியே கடற்கரைக்கு சென்றோம். கடற்கரையில் இனிமையாக பொழுதுகளை கழித்துவிட்டு அப்படியே அடுத்ததாக மற்றைய நண்பனின் வீட்டிற்கு சென்றோம். மற்ற நண்பனின் வீடு கடற்கரையிலிருந்த சற்று தொலைவிலையே அமைந்திருந்தது.
அங்கே சென்ற போது அங்கே எமக்காக சிற்றுண்டிகள், மென்பானங்கள் பரிமாறப்பட்டன. நண்பனின் பெற்றோர், சொந்தங்கள் அன்போடு உபசரித்து வழியனுப்பி வைக்க மீண்டும் முதலாவது நண்பனின் வீட்டிற்கு வந்தோம். அங்கே எமக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. மிகவும் சுவையான உணவு நண்பனின் பெற்றோரினதும், உறவுகளதும் அன்பான உபசரிப்பினால் இன்னும் இன்னும் சுவையாக இருந்தது. கிட்டத்தட்ட காலை 10 மணிக்கு கள்ளப்பாட்டுக்கு சென்ற நாங்கள் மாலை 5 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட்டு வந்தோம். நாங்கள் வந்தபோதிலும் நமது நண்பர்கள் அவர்களது வீட்டிலையே தங்கிக்கொண்டார்கள்.

இவ்வாறாக அன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைய, மறு நாள் 26 .12 .2004 பொழுது புலர்ந்தது. இந்தப் பொழுது புலர்ந்திருக்கவே கூடாது. அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. காலையில் உயிரியல் வகுப்பு 8 .30 இற்கு இருந்தது. அதனால் கள்ளப்பாட்டிலிருந்து எமது நண்பர்கள் முள்ளியவளைக்கு வந்திருந்தார்கள். இதில் கடற்கரைக்கு அண்மையில் வீடு அமைந்திருந்த நண்பன் பேரூந்தை தவறவிட்டிருந்ததால் முல்லைத்தீவு மாகா வித்தியாலத்தில் கணிதப்பிரிவில் கல்விகற்றுக்கொண்டிருந்த எமது சக நண்பன் ஒருவன் தனது உந்துருளியில் கொண்டுவந்து முள்ளியவளையில் சேர்த்திருந்தான். ஆனாலும் நேரம் தாமதமாகியமையால் மேற்படி நண்பன் அன்று வகுப்புக்கு வரவில்லை.

நாங்கள் கல்விகற்றுக் கொண்டிருந்தோம். வீதியால் சென்ற ஒருவர் அந்த தனியார் கல்விநிலைய நிர்வாகியைப் பார்த்து கடல் வருகுதாம் ஏன் பிள்ளைகளை வைச்சுக் கொண்டிருக்கிறியள் என்று கத்திக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் வேகமாக சென்றுகொண்டிருந்தார். உடனே அவசரமாக நிர்வாகி எங்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியையிடம் சொல்லிவிட்டு எங்களை வீடுகளுக்கு செல்லுமாறு சொன்னார். நாங்களும் மிகவும் வேகமாக எங்கள், எங்கள் துவிச்சக்கர வண்டிகளை மிதித்துக்கொண்டு வீடுகளுக்கு புறப்பட்டோம். நான் எனது வீட்டை அடைந்த போது அம்மா வீட்டு வாசலில் வீதியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வீதியால் வாகனங்கள், மிக வேகமாக நகர்துகொண்டிருந்தன.. நேரம் தாமதித்ததால் வகுப்புக்கு வராத எனது நண்பன் ஒரு துவிச்சக்கர வண்டி சகிதம் அம்மாவுடன் கதைத்துக்கொண்டிருந்தான். அம்மாவின் கையில் வானொலிப்பெட்டி இருந்தது. உடனே அம்மா என்னிடம் என்ன கடல்வருகாதாம் என்று சொல்லிறாங்களே உண்மையா?? என்று கேட்டார். நானும் எனக்குத் தெரிந்ததை சொன்னேன். அப்போது அம்மா குறித்த நண்பனின் பெயரை விளித்து "இவன் கள்ளப்பாட்டுக்கு போகப்போறானாம் வேண்டாம் என்று சொல்லு" என்று என்னிடம் கூற நான் நண்பனை சமாதானம் செய்துகொண்டே விடுமுறையில் வவுனியாவிலிருந்து வந்து இச் சம்பவங்களைக் கண்டு கலங்கிப்போய் அழுதுகொண்டிருந்த உறவினர்களை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்புவதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் நண்பனைத் தேடினால் எங்கும் அவனைக் காணவில்லை.,
காணாமல்போயிருந்த நண்பனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வைத்தியசாலையில் சென்று பார்த்தால் அங்கேயும் அவன் இல்லை. அப்போதுதான் அவனது அப்பா சுமாரான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். உடனே அவரிடம் சென்று அவருக்கு தேவையானவற்றை செய்துவிட்டு உரையாடியபோது. அவர் தனது மனைவி மற்றும் அங்கிருந்த இரண்டு பெண் பிள்ளைகளும் உயிர் தப்ப வாய்ப்பேயில்லை என்ற அந்த துயரச் செய்தியை சொன்னார். அவர் அப்படி சொன்னாலும் அவர்கள் நிச்சயம் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்றே நான் நம்பினேன்.

அவர் தனது மகன் எங்கே என்று என்னிடம் கேட்டார். அவனைக் காணவில்லை என்று இந்தச் சந்தர்ப்பத்தில் சொன்னால் அவரின் மனம் துன்பப்படும் என்று எண்ணியவனாக "அவன் இப்ப என்னோட நின்றவன் நான் கூட்டி வாறன் நீங்கள் வாங்கோ" என்று அவரை அழைத்துக் கொண்டுபோய் நண்பன் தங்கியிருந்த அறையில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு, நண்பனை மீண்டும் தேடத் தொடங்கினேன். கிட்டத்தாட்ட மதியப்பொழுது அம்மாவுக்கு சொல்லாமல் முல்லைத்தீவை நோக்கிச் சென்றேன். அங்கே நண்பனைத் தேடினேன். நான் பயணித்த உந்துருளி கடல் நீர் உட்புகுந்தமையால் இயங்க மறுத்தது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் அங்கும் நண்பனைக் காணாத ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினேன்.
பொழுது இருண்டது அன்றைய நாளில் நண்பனைக் காணவில்லை என்ற ஏக்கத்துடன் வீட்டுக்கு சென்றேன். அடுத்த நாள் காலையில் நண்பனின் அப்பாவிடம் சென்றபோது அவர் எங்கே மகன் என்று கேட்டார்?? எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு ஒருவர் சொன்ன குறிப்பினடிப்படையில் அவன் உங்களைத் தேடி ஒட்டுசுட்டான் சென்றுவிட்டான் என்று சொன்னேன். ஒட்டுசுட்டான் என்பது முள்ளியவளையிளிருந்து 16 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. உடனே நண்பனின் அப்பா அங்கே போய் அவனைக் கூட்டிவர முடியுமா?? என்று கேட்க போகிறோம் என்று சொல்லிவிட்டு நானும் இன்னுமொரு அண்ணாவும் உந்துருளியில் ஒட்டுசுட்டான் நோக்கி புறப்பட்டோம். ஒட்டுசுட்டானுக்கு செல்லும் பாதை (மாங்குளம்-முல்லைத்தீவு வீதியின் ஒரு பகுதி) குன்றும் குழியும் நிறைந்த செப்பனிடப்படாத பாதையாக இருந்தது. அதனால் நாங்கள் ஒட்டுசுட்டானை அண்மித்தபோது எமது உந்துருளி பஞ்ச்சராகிவிட்டது. ஒருவாறு உந்துருளியைத் தள்ளிக்கொண்டுபோய் ஒரு தெரிந்தவர்களின் வீட்டில் விட்டுவிட்டு அவர்களிடம் ஒரு துவிச்சக்கர வண்டியை வாங்கிக்கொண்டு நண்பனைத் தேடிப்புறப்பட்டோம்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில்தான் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கிய எம் உறவுகள் சிலர் தங்கவைக்கப்பட்டிருந்தமையால் அங்கு சென்று விசாரித்தபோது நண்பன் அங்கே வந்து சென்றமை தெரியவந்தது. ஆனாலும் அவனை அங்கே காணக்கிடைக்கவில்லை. உடனே நானும் என்னுடன் வந்த அண்ணாவும் எமது உந்துருளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்தோம். நல்ல வேளையாக நமது இரு நண்பர்கள் எங்களைத் தேடி இன்னுமொரு உந்துருளியில் வந்தமையால் அவர்களின் உதவியுடன் எமது உந்துருளி சக்கரத்தை கழற்றிக்கொண்டு ஒட்டுசுட்டானிலிருந்து நான்க்கைந்து கிலோமீற்றருக்கு அப்பாலிருந்த கற்சிலைமடுவுக்கு கொண்டுபோனால் டியுப் ஒட்ட முடியாதளவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. பிறகு ஒரு புது டியுப் வாங்கி பொருத்திக் கொண்டு ஒட்டுசுட்டானிலிருந்து முள்ளியவளையை நோக்கி புறப்பட்டோம்.
நாங்கள் முள்ளியவளை வந்தபோது நண்பனின் அப்பாவும், நண்பனும் கயட்டையடி நல்லடக்க இடத்துக்கு சென்றுவிட்டார்கள் என்றும் நண்பனின் அம்மா, ஒரு அக்காவின் உடலங்கள் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்தத் துயரச் செய்தியுடன் கயட்டையடி நோக்கி சென்றால் அழுகை...அழுகை... நிறைந்த உறவுகள்.. உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.... நண்பனின் துன்பத்தில் பங்கெடுத்தேன்.. ஆனாலும் கடைசிவரை அவனது அம்மா, அக்கா ஆகியோரின் உடலங்கள் அங்கு வரவேயில்லை.. இரவாகியமையால் நண்பனையும் அழைத்துக் கொண்டு அவனது தங்குமிடத்துக்கு வந்தோம்..

கடைசிவரையும் நண்பனின் அம்மாவினதோ அல்லது அக்காமாரினதோ உடலங்களை காணக்கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களில் அம்மாவினதும், ஒரு அக்காவினதும் உடலம் முதலிலும் பின்னர் மற்ற அக்காவினது உடலமும் கண்டெடுக்கப்பட்டு அந்த இடத்திலையே அடக்கம் செய்யப்பட்டதாக அறியமுடிந்தது. இப்படி பல பல கதைகள்.. பலருக்கும் பல பல சோகங்கள்.. மறக்கச் சொன்னாலும் உள்ளம் இன்றும் அழுகிறது.. ஒன்றா, இரண்டா.. எத்தனை சொந்தங்கள் இந்த ஆழிப்பேரலை என்னும் அரக்கனால் பலிகொள்ளப்பட்டார்கள்... இந்த நாளில் இழந்த எம் உறவுகளை மனதில்கொண்டு தியானிப்போம்.. ஏய் ஆழிப்பேரலையே இனி ஒருபோதும் உன் அகோரதாண்டவத்தை அரங்க்கேற்றிவிடாதே!!

Saturday, December 19, 2009

APPLE சாப்பிட்டு ICE CREAM குடிக்கலாமா???

இரண்டாவது வலைப் பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றி பல விடயங்களை எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனாலும் ஒரே விடயத்தை திரும்பத் திரும்ப எல்லோரும் எழுதுவதை விட புதிதாக ஏதாவது எழுதலாம் என்று இரண்டாவது சந்திப்பில் மூத்த பதிவர் ஒருவர் சொன்ன ஆலோசனையின் அடிப்படையில் அதைப் பற்றி எழுதவில்லை.. (ஆஹா!! நேரம் இல்லை என்று நான் சொன்னால் என்ன இவர் வெட்டிப் பிடுங்கிறார் என்று நீங்கள் சொல்லுவீங்கள் அதுதான் இந்த சமாளிப்பிக்கேஷன்..)
கடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் பயனுறப் பதிவெழுதுதல் தொடர்பாக அதிகமாக பேசப்பட்டது. பயனுறப் பதிவெழுதும் பலருக்கும் அதற்கான பின்னூட்டங்கள் முறையாகக் கிடைப்பதில்லை என்கின்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. நிலைமை இப்படி இருக்க பயனுறப் பதிவெழுதுகிறவர்கள் தொடர்ந்தும் பயனுறவே எழுதுங்கள், பின்னூட்டங்களைக் கொண்டு உங்கள் தளத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்காதீர்கள் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.. அந்தவகையில் எனது இந்தப் பதிவும் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ள பதிவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு தொடர்கின்றேன்..
எனது இந்தப் பதிவில் நான் புதிதாக எதையும் சொல்லப்போவதில்லை. இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்பதால் பதிகின்றேன். அந்த வகையில் இந்தப்பதிவில் நான் அறிந்த தூய தமிழ்ச் சொற்கள் இரண்டை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நாங்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் சில சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை தவிர்த்து அவற்றை அப்படியே ஆங்கிலத்திலையே உச்சரிக்கின்றோம். அந்தவகையில் நம்மில் பெரும்பாலானவர்கள் சிறிய வயது முதல் APPLE என்பதை தமிழிலும் ஆப்பிள் என்றே அழைத்துவருகின்றோம்.. அதற்கான முறையான தமிழ்ச் சொல் என்ன என்பது தொடர்பாக கொஞ்சம் தேடிப்பார்த்தால் மதுரையில் ஒரு கடையில் ஆப்பிள் என்பதற்கு மேலைநாட்டுக் கோலை இலந்தை என்று தமிழ் வடிவம் கொடுத்திருக்கின்றார்களாம்.
உண்மையில் நாம் ஆப்பிளை இலந்தைப் பழத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரியான அமைப்புடையவையாகவே காட்சி தருகின்றன. உருவத்தில் மட்டும் ஆப்பிள் பெரிதாகவும் இலந்தப்பழம் சிறிதாகவும் இருக்கின்றன. சுவை இரண்டும் வேறுபட்டவை என்றாலும் இரண்டிலும் ஒரு வகையான மாத்தன்மை இருக்கின்றது. ஆக மொத்தம் நமது இலந்தைப் பழத்தின் அண்ணன்தான் இந்த ஆப்பிள். அதாவது மேலைநாட்டுக் கோலை இலந்தை. (ஆஹா!! APPLE என்ற நான்கு எழுத்து சொல்லுக்கு இவ்வளவு பெரிய தமிழ் அர்த்தமா?? என்று நீங்கள் யோசிக்கிறது புரியுது.. என்ன செய்ய நாங்கள் தமிழர் எதையும் முறையான அர்த்தத்துடன்தான் தமிழ்ப்படுத்த வேண்டும்.)
சரி இனி அடுத்த தூய தமிழ்ச் சொல்லுக்கு வருவோம். இதுவும் மதுரையில் உள்ள அந்தக் கடையில் தமிழ் வடிவில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் இருந்த ஒரு விடயம்தான். அதாவது நாங்கள் ICE CREAM என்பதை தமிழிலும் பெரும்பாலும் ஐஸ்கிரீம் என்றே அழைக்கின்றோம். இருப்பினும் இதனை சிலர் குளிர்களி என்றும் தமிழில் சொல்கின்றார்கள். உண்மையில் ICE என்றால் தமிழில் குளிர் என்று அர்த்தமில்லையே!!! மாறாக ICE என்றால் தமிழில் பனி என்றே அர்த்தம். ஆகவே ICE CREAM ஐ குளிர்களி என்று அழைப்பது பொருத்தமற்றது என்றே சொல்ல தோன்றுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க மதுரையில் உள்ள மேற்படி கடையில் ICE CREAM என்பதற்கு பால்பனி வெண் குழைவு என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்களாம்.
ஒரு வேளை ICE CREAM என்பதில் MILK என்கின்ற சொல் வரவில்லையே பிறகு எப்படி தமிழ்ப்படுத்தும்போது பால் என்ற சொல் வந்தது என்றும், ஏன் எல்லா ICE CREAM உம் வெள்ளை நிறத்திலா உள்ளது என்றும் தர்க்கிக்க முடியும். ஆனாலும் ICE CREAM தயாரிக்கும்போது அதற்குள் பால் உள்ளீட்டுப் பொருளாக அமைவதால் பால்பனி வெண் குழைவு என்பதில் "பால்" என்ற சொல்லை சேர்த்ததை நியாயப்படுத்தலாம். மேலும் ஆரம்ப காலங்களில் ICE CREAM வெள்ளை நிறத்திலையே இருந்தமையால் பால்பனி வெண் குழைவில் "வெண்" என்ற சொல்லை சேர்த்ததை நியாயப்படுத்த முடியும். ஆகமொத்தம் நாங்கள் பயன்படுத்தும் குளிர்களி என்ற தமிழ்ப் பதத்தை விட பால்பனி வெண் குழைவு என்கின்ற தமிழ் சிறந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

Saturday, December 12, 2009

ஏமாற்றியது இலங்கை...தப்பியது இந்தியா!!!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றுமொரு இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-இருபது தொடர் சம நிலையில் முடிவடைந்திருக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே கடந்த 09 ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையணி 29 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியை வென்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்கின்ற எதிர்பார்ப்பில் இன்றைய தினம் இலங்கை அணி களமிறங்கியது. மறுபுறத்தில் இந்தப் போட்டியை எப்படியாவது வெற்றிகொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் புகுந்தது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றும் முதலில் துடுப்பெடுத்தாமல் இலங்கையணியை துடுப்பெடுத்த ஆட பணித்தமைதான் தோல்விக்கான காரணம் என்று சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கை நேரப்படி மாலை 5 .30 இற்கு மொஹாலியில் ஆரம்பமாகிய இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.


இலங்கையணி சார்பாக அணித்த் தலைவர் குமார்சங்கக்கார (59 ) அரைச் சதம் கடந்தார். மேலும் சிந்திக்க ஜெயசிங்க 38 ஓட்டங்களையும், சனத் ஜெயசூரிய 31 ஓட்டங்களையும் பெற்று ஓரளவுக்கு பிரகாசித்திருந்தார்கள். உதிரிகளாக இந்திய அணியினரால் இந்தப் போட்டியில் 24 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இருபது ஓவர்கள் நிறைவில் இலங்கையணி ஏழு விக்கட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மேலும் இந்தப் போட்டியில் சனத் ஜெயசூரிய 25 ஓட்டங்கை பெற்றபோது 20 -20 போட்டியில் 600 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது வீரராக தன்னைப் பதிவு செய்துகொண்டார். இதுவரையில் 23 இருபதுக்கு-இருபது போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இன்று பெற்ற 31 ஓட்டங்கள் அடங்கலாக மொத்தமாக 606 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். ஏற்கனவே இந்திய அணியுடன் நடைபெற்ற இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையணியின் மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டில்ஷான் 600 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரராக தன்னை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையணி நிர்ணயித்த 207 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணி 19 .1 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பாக வீரேந்திர ஷேவாக் (64 ), யுவராஜ்சிங் (60 ) அரைச் சதம் கடந்தனர். மேலும் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 46 ஓட்டங்களையும், கெளதம்கம்பீர் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்கள். உதிரிகளாக இலங்கையணியினரால் இந்தப் போட்டியில் 7 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டி யுவராஜ்சிங்கின் 06 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இன்றைய தினம் தனது இருபத்தெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டே போட்டியிலும் கலக்கிய இந்திய அணியின் யுவராஜ்சிங் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடிவரும் உத்ரபிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இருபத்தியிரண்டு வயதான சுதீப் தையகி என்கின்ற வலது கைப் பந்துவீச்சாளர் தனது முதலாவது சர்வதேச இருபதுக்கு-இருபது போட்டியில் விளையாடியிருந்தார்.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்தபோது இலங்கையணி ரசிகர்கள் இருபதுக்கு-இருபது தொடரை இலங்கை கைப்பற்றும் என்று நம்பியிருந்தார்கள்..... இனி எதிர்வரும் பதினைந்தாம் திகதி ராஜ்கோர்ட்டில் ஆரம்பமாகும் நான்கு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கையணி கைப்பற்றுமா??? வழக்கம்போல பொறுத்திருந்துபார்ப்போம்...

கவனம் ஒபாமா கறுப்பு முகமூடி அணிந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ்!!!

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா தேசத்தை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் இணக்கப்பாட்டினை வெளியிட்டதன் பின்னர் அங்கு 117 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அத்துடன் கடலோர ஆந்திர மாநிலம், ராஜலசீமா பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. 1972 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை ராஷ்டிர சமித்தி தலைவர் சந்திரசேகர ராவின் 11 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைதொடர்ந்து ஒரு கொள்கை அளவிலான உடன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதன் பின்னணியில்தான் இவையனைத்தும் நிகழ்கின்றன..

இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திற்காக பல வழிகளிலும் போராடிய இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்திற்காக குறைந்தபட்சம் ஒரு மாநிலச் சுயாட்சிகூட இதுவரை உறுதிப் படுத்தப்படாத நிலை இலங்ககையின் இனப்பிரச்சினை தொடர்கின்றது.. ஒரு தனித் தெலுங்கானா தேசம் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில் அவசியமாகின்ற பொது மனித உரிமை மீறல்கள் இன ஒடுக்கு முறைகள் நிகழும் இலங்கையில் ஏன் ஒரு சுயாட்சி சிறுபான்மைச் சமூகத்திற்கு வழங்கப்படக் கூடாது என்கின்ற ஒரு கேள்வி இயல்பாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.


சரி இனி விடயத்துக்கு வருவோம் அமெரிக்கா சம்பந்தமாக அண்மைக் காலங்களில் வெளிவரும் செய்திகள் விசித்திரமானவையாகவும், வித்தியாசமானவையாகவும் அமைகின்றன. அந்த வகையில் அண்மையில் சமாதானத்துக்கான நோபல் பரிசை நோர்வேயில் பெற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தப் பரிசுக்கு தன்னைவிட பொருத்தமான பலர் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பராக் ஒபாமா பொருத்தமற்றவர் என்கின்ற கருத்து பொதுவாகா எல்லோரிடமும் நிலவுகின்றது.



இவ்வாறான ஒரு சூழலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க்கப்பட்டிருக்குன்றது. இங்கு அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அவர் அந்த நாட்டுக்கு ஒரு மாறுதலான ஜனாதிபதி மட்டுமே அன்றி உலக நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் அவரால் எந்த மாற்றங்களும் பெரியளவில் கொண்டுவரப்படவில்லை என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அது உலக அரங்கில் நிறைய மாறுதல்களைக் கொண்டு வரும் என்றே பலரும் நம்பியிருந்தார்கள். ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட ஒபாமாவின் வருகை போரியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்திற்கும், தமக்கும் சாதகமாக அமையும் என்றே கருதியிருந்தார்கள். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டு அவர் மென்போக்கை கடைப்பிடித்தால் அது அமெரிக்காவின் வல்லரசு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் பரவலான கருத்துக்கள் வெளிவந்திருந்தன.
ஆனால் கருத்துக்கள் அனைத்தையும் பொய்யாக்கியதாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் பழைய குருடி கதவைத் திறவடி என்பதாகவே அமைந்திருக்கின்றது. அதாவது அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேலும் முப்பதாயிரம் துருப்புக்களை அனுப்பபோகின்றதாம். அத்துடன் ஈரானின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தேவை ஏற்படும் பட்சத்தில் அதன் மீது போர் தொடுக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ரொபேர்ட் ஹேர்ட்ஸ் தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தம் ஒரு பக்கம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு இன்னுமொரு பக்கம் அமெரிக்காவின் யுத்த மோகங்கள் கலையவில்லை. இந்த நிலையில் ஆசிய நாடான பாகிஸ்தான் மீதும் அமெரிக்காவின் கவனம் திரும்பியிருக்கின்றது. அந்த வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக உதட்டளவில் மட்டுமே சொல்லிக் கொள்வதாகவும் ஆனால் உண்மையாகச் செயற்படவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது. இதேவேளை தமது நாடு தொடர்பிலான அணுகு முறையில் அமெரிக்கா மாற்றம் ஒன்றைக் கொண்டுவரவேண்டுமென்று பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறைகள் இவ்வாறு இருக்க இலங்கைக்கும்- அமெரிக்காவுக்கும் இடையில் மீண்டும் சுமுகமான உறவு உருவாகி வருவதாகவும், இலங்கைக்கு வழங்கி வந்த இராணுவ உதவிகளை அமெரிக்க நிறுத்தியதன் பின்னர் இருதரப்பு உறவில் இருந்த விரிசல் நிலை தற்போது நீங்கி வருவதாகவும், அமெரிக்கா நிபந்தனைகளுடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கும் என்றும், நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா யாருக்கும் அதரவு தெரிவிக்காது என்றும் அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார். (ஆமா இனி எதுக்கையா இராணுவ உதவி??? இன்னும் மக்களின் உயிர்களைக் கொல்லவோ???) மேலும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார் (இது வழமையான வலியுறுத்தல்தானுங்கோ)
ஆகமொத்தம் அமெரிக்காவின் நடவடிக்கைகளை பார்க்கின்றபோது அமெரிக்கா உலக நாடுகளிடையே ஒரு ஆரோக்கியமான உறவைப் பேணிக் கொள்ளாமல் , ஒரு வல்லரசாக தனது பலத்தை நீதி, நியாயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் சுய லாபங்களுக்காக செயற்படுவதிலையே இன்னமும் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது. கவனம் ஒபாமா கறுப்பு முகமூடி அணிந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ் என்று எச்சரிக்க மட்டுமே எம்மால் முடிகின்றது...

Thursday, December 10, 2009

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்?????


எனது "எப்பிடி இருந்ததை எல்லாம் இப்பிடியாக்கீட்டாங்க" என்ற பதிவைத் தொடர்ந்து அவ்வாறான பல பதிவுகளை பதிய நினைத்திருந்தேன். ஆனாலும் துரதிஷ்டவசமாக மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலப்பகுதியாக வலைப்பதிவுப் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. இந்த நிலையில் இன்றைய பதிவின் மூலம் திரிபடைந்துள்ள சில அர்த்தங் கொள்ளல்களை பகிர்த்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
எனது "எப்பிடி இருந்ததை எல்லாம் இப்பிடியாக்கிட்டாங்க" என்ற பதிவில் "களவும் கற்று மற" என்பது "களவும், கத்தும் மற" என்பதிலிருந்து திரிபடைந்த ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அண்மையில் ஒரு பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர், "களவும் கற்று மற" என்றால் சங்க காலத்தில் களவு என்பது காதலைக் குறித்ததாகவும் "காதலும் கற்று மற" என்பதே இதன் உண்மையான அர்த்தம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கு நான் முதலில் சொன்ன "களவும், கத்தும் மற" என்பதில்தான் அதிக உடன்பாடு என்கின்ற போதிலும் இந்த இரண்டு கருத்துக்களையும், இதனைப் போன்று சொல்லப்படுகின்ற ஏனைய கருத்துக்களையும் நன்கு அலசி ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். (தயவு செய்து உங்களுக்கு தெரிந்த இது பற்றிய விடயங்களை கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள். மிகுந்த உதவியாக இருக்கும்.)
சரி இந்த விடயம் இவ்வாறு இருக்க இனி அடுத்த விடயத்திற்கு வருவோம். இது சில வேளைகளில் வேடிக்கையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் என்னை இது கொஞ்சம் சிந்திக்க வைத்த ஒன்று என்பதால் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். அதாவது "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்று நமது தமிழ்ச் சமுதாயத்திடம் ஒரு கருத்து நிலவுகின்றது. இதனைச் சாதாரணமாக நாங்கள் ஊரில் உள்ள மற்றைய பிள்ளைகளுக்கு உணவு, அறிவு ஊட்டி வளர்த்தால் தனது பிள்ளை தானாக வளரும் என்று அர்த்தம் கொள்கின்றோம். ஆலயங்கள் தேவையில்லை என்று ஆரம்பிக்கும் காமராசு திரைப்படப் பாடலிலும் "ஊராரை ஊட்டி வளர்த்தேன் உலகே உன் உறவாய் மாறும்.." என்று ஒரு வரியும் இந்த அர்த்தத்தைத்தான் உணர்த்துகிறது. ஆனால் இதற்கு இன்னுமொரு அர்த்தம் சொல்லப்படுகின்றது. அதாவது ஒரு கணவனுக்கு தனது மனைவி ஊரான் பிள்ளையாகத்தான் இருப்பாளாம். அந்த வகையில் ஊரான் பிள்ளையான மனைவி கருவுற்றிருக்கும் காலப் பகுதியில் அவளுக்கு சத்தான உணவுகளைக் கொடுத்தால் அவள் வயிற்றில் வளரும் கணவனின் பிள்ளை (தன் பிள்ளை) தானாய் வளரும் என்று பொருள் கொள்கின்றார்கள். வேடிக்கையாகப் பார்க்காமல் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் இதுவும் சரியானது என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் எமது தமிழ்ச் சமுதாயத்தின் ஆரம்ப காலங்கள் பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியவையாக அல்லது முதன்மைப்பசுத்தியவையாகவே அமைந்திருக்கின்றன.. ஆகவே ஆண்களுக்கான ஒரு தத்துவமாக இது உருவாகியிருக்கலாம்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கின்ற விடயம் இவ்வாறு இருக்க இனி அடுத்த விடயத்துக்கு வருவோம். இது பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையிலான ஒரு உறவை சொல்லுவது. அதாவது "ஏவா மக்கள் மூவா மருந்து" என்கின்ற தத்துவத்திற்கு நம்மில் பலரும் "சொல்லாமலே பெற்றோர்களின் தேவைகளை உணர்ந்து செயற்படும் பிள்ளைகள் சிறப்பானவர்கள்" என்று பொருள்கொள்கின்றோம். அதாவது "மூவா மருந்து" என்றால் என்ன அதற்கான முழுமையான அர்த்தம் என்னவென்று நம்மில் பெரும்பாலானவர்கள் சிந்தித்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த "ஏவா மக்கள் மூவா மருந்து" என்பதற்கு "பெற்றோர்களின் தேவைகள் என்னவென்று அவர்கள் சொல்லாமலே பிள்ளைகள் செய்தால் பெற்றோர்களின் நரை, திரை, முதுமை ஆகிய மூன்று வியாதிகளுக்கும் அதுவே சிறந்த மருந்து" என்று பொருள்கொள்ளப்படுகின்றது. இங்கு நரை என்பது தலை நரைத்தலையும், திரை என்பது கண்பார்வை குறைதலையும், முதுமை என்பது வயது அதிகரிப்பதால் வெளித்தெரியும் உடலமைப்பையும் குறிக்கின்றது. (ஆஹா நாங்களெல்லாம் எவ்வளவு முக்கியமான வியாதிகளுக்கு மருந்துகளாக இருக்கின்றோம் என்று பெருமைகொள்ள வேண்டுமென்றால் முதலில் ஏவா மக்களாக இருக்க வேண்டும்.)
இந்த வேளையில் எனது தந்தையார் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகின்றது. சொல்லாமல் செய்வார் பெரியார், சொல்லிச் செய்வார் சிறியார், சொல்லியும் செய்யார் கயவர்.
ஆகமொத்தம் நமது தமிழ் மொழியில் பல விடயங்கள் திரிபடைந்துதான் உள்ளன. அவற்றிற்கான உண்மையான அர்த்தங்களை அறிந்துகொள்வது கடினமென்றாலும் அறிந்து கொண்டாலும் இந்தக் காலத்துக்கு அவைபொருத்தமாக அமையாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை இலகுவாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இருந்தாலும் ஆரம்ப அல்லது மாற்று அர்த்தங்களை அறிந்து வைத்திருப்பதிலும், அறிகின்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் தப்பில்லை என்று நினைக்கின்றேன். எனவே எனது இவ்வாறான பதிவுகளும் அவ்வப்போது தொடரும்.....

Monday, December 7, 2009

ஜனாதிபதித் தேர்தல்- யுத்த வெற்றியின் பிரதான பங்காளி யார்?? வாக்கெடுப்பு!!!



இன்றைய இலங்கையின் அரசியல் நிலைமையைப் பொறுத்தவரையில் யாருமே எதிர்பார்க்காத ஒரு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எல்லாம் செயல் வடிவம் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத்பொன்சேகா எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கு எதிராக போட்டியிடவுள்ளமை யாருமே எதிர்பார்க்காத ஒரு அரசியல் மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
அரசாங்கம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அறிவித்ததன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை இன்னும் சில ஆண்டுகளுக்கு யாருமே அசைக்க முடியாது என்கின்ற ரூ கருத்து எல்லா அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகள் மத்தியில் தோன்றியமை உண்மைதான். ஆனாலும் ஜெனரல் சரத்பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் இந்த கருத்துருவத்தை மீள் பரிசீலனைக்குட்படுத்தியுள்ளது. மேலும் யுத்தத்தின் வெற்றி என்கின்ற மிகப் பெரிய அரசியல் பலம் கிட்டத்தட்ட இரண்டாக உடைக்கப்பட்டிருப்பதனால் அரசாங்கத்தின் ஆயுட்காலம் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சாருமா?? அல்லது முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை சாருமா?? என்று சிந்திக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்ப்பட்டிருக்கிறார்கள்.

முன்பு அரசாங்கம் யுத்த வெற்றியை வைத்துக் கொண்டு நீண்ட காலம் அரசியல் நடாத்த முடியாது என்றும் இன்னும் சில வருடங்களில் படித்த மக்கள் பொருளாதாரம் குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் அப்போது யுத்த வெற்றி இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் அந்த நீண்ட ஆய்ட்காலத்தைக் கடந்து யுத்தம் நிறைவடைந்திருக்கும் ஆறு மாதத்துக்குள் அரசாங்கம் தனது இருப்புப் பற்றி சிந்திக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேசப்பட்டபோது ஜனாதிபதி யுத்த வெற்றியின் பரபரப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்கக் கூடும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த யுத்த வெற்றி யாருக்கு சொந்தமானது??? என்று தீர்மானிக்கும் சக்தியாக சிங்கள மக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் அரசியலுக்குள் நுழையப்போவதில்லை என்றுகூறிய சரத்பொன்சேகா திடீரென அரசியலுக்குள் நுழைந்ததன் பின்னணியில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க புலனைவுத்துறையையே சந்தேகிக்கின்றார்கள்.


நிலைமை இவ்வாறு இருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானித்து அறிவித்துக் கொண்டிருக்கின்றன. எனினும் பாராளு மன்றத்தில் அதிக ஆசனத்தைக் கொண்ட சிறுபான்மைக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்து நிலைப்பாடு குறித்து இன்னமும் தெளிவான ஒரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை. எந்த அடிப்படையில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிறைய சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. பலவாறான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டமைப்புக்குள் இவ்வாறான சிக்கல்கள் இருப்பது இயல்பானதுதான்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள்ள ஐந்து சாத்தியமான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்திருப்பதாக தெரிய வருகின்றது. இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது, விக்கிரமபாகு கருணாரட்னவை ஆதரிப்பது, தேர்தலை புறக்கணிப்பது, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது, மக்களை தங்கள் தங்கள் விருப்பின்படி செயற்படுமாறு பணிப்பது ஆகியவையே அந்த ஐந்து வழிமுறைகளுமாகும்.

இதில் முதல் இரண்டு வழிமுறைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் அடையாளத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. கடைசி மூன்று வழி முறைகளில் தேர்தலைப் புறக்கணிக்கக்கோருவது தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இலங்கையில் குறைவடைந்திருக்கும் நிலையில் ஒரு அரசியல் தற்கொலையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமையக்கூடும். அதாவது கடந்த முறைக்கு பின்னர் இன்னுமொரு தடவை தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்கள் தயாராக இருப்பார்களா என்கின்ற சந்தேகம் உள்ளது. மேலும் தமிழ் மக்களை தங்கள் விருப்பின்படி செயற்படுமாறு பணிப்பது ஒரு பொறுப்புவாய்ந்த அரசியல் கட்சிக்கட்சிக்கு நாகரீகமாக இருக்காது. மேலும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது என்பதும் குறுகிய காலத்துக்குள் மிகுந்த சவாலான ஒன்றாக இருக்கும்.. மேலும் எல்லா சிறுபான்மைக் கட்சிகளினதும் ஆதரவுடன் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளுமானால் அது வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் சமூகத்திற்கோ ஜனாதிபதித் தேர்தல் முக்கியமான ஒன்று இல்லை என்றாலும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானமே அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதன் வாக்கு வங்கியை தீர்மானிக்கும் என்ற அடிப்படையில் தெளிவாகச் சிந்திக்கவேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. ஆனால் அண்மைக் கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது. அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்படிக்கை, ஒப்பந்தம், உறுதிமொழி என்கின்ற சொற்களைப் பயன்படுத்தி ஆதரவு வாழங்கினால் அதுவும் ஒரு அரசியல் தற்கொலைக்கு சமனாகும் என்பது பொதுவான கருத்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பிலான நிலைமைகள் இவ்வாறு இருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மைச் சமூகம் இருக்கும் என்கின்ற ஒரு வகையிலான கருத்து முன்னைய காலங்களைப் போல முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதாவது முன்னைய காலங்களுக்கு பொருத்தமாக இருந்த ஒரு கருத்து மீள் பரிசீலனை இன்றி தொடர்ந்தும் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிச் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள இலங்கையில், சிறுபான்மைக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத சூழலில் தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகமே தீர்மானிக்கும் சக்திகளாக இந்தத் தேர்தலிலும் இருக்கப்போகின்றன என்று அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. அதாவது தற்போது சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் திட்டமிட்டு சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மைச் சமூகம் இருக்கும் என்கின்ற கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

உண்மையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கட்சிகளின் வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் வெற்றி வாய்ப்பு மிக மிக அதிகம் என்கின்றபோதிலும் ஜனாதிபதித் தேர்தல் கட்சிக்கும் அப்பால் தனிப்பட்ட மரியாதைகளின் அடிப்படையிலானது என்பதால் தேர்தல் முடிவுகளை எளிதில் எடைபோட்டுவிட முடியாது. மேலும் இரண்டு வேட்பாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கதாநாயகர்கள் என்பதால் சிங்கள மக்கள் மத்தியில் இருவருக்கும் அதிகமான மரியாதை நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறான ஒரு சூழலில் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை தவிர்த்துப் பார்க்கின்றபோது நடைபெற இருப்பது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சாருமா?? அல்லது முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவைச் சாருமா?? என்கின்ற ஒரு கருத்துக்கணிப்பாகவே அமையவுள்ளது.. அன்றி தமிழ் பேசும் சமூகத்திற்கு இதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்பதே உண்மை...



Sunday, December 6, 2009

சாதிக்கத் தவறியது இலங்கை!!!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. உண்மையில் இலங்கை அணியைப் பொறுத்த வரையில் இந்தத் தொடரை இந்திய மண்ணில் வைத்து வெற்றி கொண்டு சாதனை படைக்கும் என்றே பலரும் சொல்லியிருந்தார்கள்.(நாங்களும் நம்பியிருந்தோம்.) ஆனால் தொடரில் ஒரு போட்டியைக்கூட வெற்றி கொள்ள முடியாத நிலையில் 2 -௦ 0 என்ற நிலையில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. உண்மையில் இந்தத் தொடரின் முதலாவது போட்டியை அவதானித்தவர்கள் இலங்கை அணியின் வெற்றி உறுதி என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் அடுத்து வந்த இரண்டு போட்டிகளும் நிலைமையை மாற்றி அமைத்திருந்தன. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் இனிங்ஸ் தோல்வி என்பது தர வரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த இலங்கைக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே இருக்கும்.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் தங்கள் நாட்டில் நடந்த தொடரை வெற்றிகொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் முதல்போட்டியை கஷ்டப்பட்டு சமநிலைப்படுத்திவிட்டு அடுத்த இரண்டு போட்டிகளையும் மிகவும் அபாரமாக வெற்றிபெற்று டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவரையில் முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்கா இரண்டாமிடத்துக்கும், இரண்டாமிடத்திலிருந்த இலங்கை நான்க்காமிடத்துக்கும் பின்தள்ளப்பட்டிருக்கின்றன. நான்காமிடத்திலிருந்த அவுஸ்திரேலியா மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பித்து இன்று நிறைவுற்றிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கம்பீர் இல்லாமல் அவருக்கு பதிலாக முரளி விஜயை பயன்படுத்தி இந்தியா வெற்றிபெற்றமையையும் கவனத்தில்கொள்ளவேண்டும். உண்மையில் முரளி விஜய் தனக்குக்கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனாலும் 13 ஓட்டங்களால் சதமடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டமை துரதிஷ்டவசம் என்றே சொல்லவேண்டும். அண்மையில் கம்பீர் இல்லாத நிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இந்தியா யாரைக் களமிறக்கப் போகிறது (நிரந்தரமாக) என்று எழுந்த கேள்விக்கு முரளி விஜய் தனது துடுப்பாட்டத்தின் மூலம் பதில் சொல்லியுள்ளார்.

நிறைய சாதனைகள் நிகழ்த்தப்பட்ட மும்பை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மற்றுமொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஷேவாக் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை ஏழு ஓட்டங்களினால் தவற விட்டிருந்தார். அத்துடன் இந்தப்போட்டியில் இந்திய அணியின் தலைவர் டோனி சதமடிக்க வேண்டுமென்கின்ற நோக்கில் விளையாடியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோதிலும் இந்திய அணி வெற்றி பெற்றமையால் டோனி தப்பித்துக் கொண்டார். இல்லையேல் எல்லோரும் டோனியை வசைபாட ஆரம்பித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பந்துவீச்சு மிக மிக மோசமாக இருந்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முரளிதரன் பெரிதாக சோபிக்கவில்லை. ஆரம்பத்தில் இவர்மீதான விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும் இலங்கைக்கு தலையிடியைக் கொடுத்த ஷேவாக்கின் விக்கட்டை வீழ்த்தியதன் மூலம் முரளிதரன் விமர்சனங்களில் இருந்து கொஞ்சம் காப்பாற்றப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் முதலாவது இனிங்ஸ்ஸில் டில்ஷான் சதமடித்து (109 ) காப்பாற்றியிருந்தார். அத்துடன் மத்தியுஸ் (99 ) ஒரு ஓட்டத்தினால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். பரணவிதாரண (53 ) அரைச் சதம் கடந்திருந்தார். ஆனால் இரண்டாவது இனிங்ஸ்ஸில் அணித் தலைவர் சங்கக்கார (137 ) சதம் கடந்திருந்தார். பரணவிதாரண (54 ) அரைச் சதம் கடந்தார். தவிர வேறு எந்தவொரு வீரர்களும் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் முரளிதரன் (4 ), ஹேரத் (3 ) ஆகியோர் ஓரளவுக்கு
இலங்கையை காப்பாற்றியிருந்தார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் துடுப்பாட்ட வீரர்களும் சரி பந்துவீச்சாளர்களும் சரி தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்திருந்தார்கள். அந்த வகையில் முதல் இனிங்ஸ்ஸில் ஷேவாக் (293 ) ஏழு ஓட்டங்களால் முச்சத வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அணித்தலைவர் டோனி (100 ) சதம் கடந்தார். முரளி விஜய் (87 ), டிராவிட் (74 ), லக்ஸ்மன் (62 ), டெண்டுல்கர் (53 ) ஆகியோர் அரைச் சதம் கடந்தார்கள். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக முதல் இனிங்ஸ்ஸில் ஹர்பஜன்சிங் (4 ), ஒளஜா (3 ) ஆகியோரும் இரண்டாவது இனிங்க்ஸ்ஸில் ஸ்ரீஷாந்தும் (5 ) பிரகாசித்திருந்தார்கள். மேலும் இன்றைய போட்டியின் சிறப்பாட்டக் காரராகவும், தொடர் நாயகனாகவும் வீரேந்திர ஷேவாக் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறாக ஒரு இனிங்ஸ்ஸாலும் 24 ஓட்டங்களினாலும் இன்றைய மூன்றாவது போட்டியை வெற்றி பெற்றதன் மூலமாக தொடரை 2 -0 என்று கைப்பற்றியிருக்கும் இந்திய அணி அடுத்து நடைபெற உள்ள 2 போட்டிகளைக் கொண்ட 20 -20 போட்டியிலும் சாதிக்குமா??? இல்லையேல் இலங்கை பழிதீர்க்குமா??? பொறுத்திருந்து பார்ப்போம்.......

Saturday, December 5, 2009

பதும நாதம்!!!!!!!!!!!!












இது எனது தந்தையார் அமரர் உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் (பதுமநாயக முதலியார்) அவர்களின் வாழ்க்கை வரலாறு..

ஈழவள நாட்டின் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வியங்காட்டில் குமாரவேலு மீனாட்சியம்மை தம்பதியினருக்கு 1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வந்துதித்த ஆண் மகவிற்கு மயில்வாகனம் எனப் பெயர் காணப்பட்டது. இவரின் பாசத்திய்குரிய சகோதரியாக வேதநாயகி வந்துதித்தார்.

இவர் தனது கல்வியை யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து தொடர்ந்ததுடன், அன்னை வழித் தொடர்பில் சைவை சமயத்தின் ஆச்சார ஒழுக்கங்களை சீராகக் கடைப்பிடித்து கீரிமலையில் உள்ள சடையம்மா மடத்திலிருந்து சைவக் கிரியைகள் சம்பந்தமான விளக்கங்களை குருவிடம் முறையாக கற்றுக்கொண்டார்.

இவர் இளைஞராக இருக்கும் காலத்திலேயே தமது வீட்டின் அருகில் அமைந்திருந்த பூதவராயர் ஆலயம், வெள்ளைப் பிள்ளையார் ஆலயம், சிவஞான பிள்ளையார் ஆலயம் (கலட்டிப் பிள்ளையார்) என்பவற்றில் அதீத பற்றுக் கொண்டவராவார் என்பதுடன் வெள்ளைப் பிள்ளையார், சிவாஞானப் பிள்ளையார் ஆலயங்களின் ஆரம்ப கால பூசகராகவும் இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளியவளை பிராதன வீதியில் உள்ள ஞான வைரவர் ஆலயமும் இவராலேயே ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் இவர் நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெறும் சூர சங்கார நிகழ்வுகளில் நவவீரர்களில் ஒருவராக முடிதரித்தவர்.

தனது இளம் பராயத்தை யாழ்ப்பாணத்தில் கழித்த இவர் முல்லைத்தீவு முள்ளியவளையில் குமாரசாமி மகேஸ்வரி தம்பதியரின் மூத்த புதல்வியான சுசிலாதேவியை (லீலாவதி) விரும்பி மனம் செய்து முறையே சத்தியசீலன்(கண்ணன்), ஞானசீலன்(ஞானம்), ஜெயசீலி(ஜெயா), மயூதரன்(மயூ), செந்தூரன்(செந்துவா) ஆகியோருக்கு தந்தையுமானார்.பிள்ளைகள் தங்கள் கல்வியைத் தொடர ஆரம்பத்திலிருந்தே தேவையான வசதிகளையும், உதவிகளையும் வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டார். அதன் பெறுபேறாக பிள்ளைகள் அரச துறையிலும், இதர துறைகளிலும் கடமை புரிவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். மேலும் தனது மூன்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது கடமையை செவ்வனே நிறைவேற்றினார்.

உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் அவர்கள் திருமணம் செய்து முள்ளியவளையில் குடியேறிய பின்னரும் இவரது சமயப்பணி தொடர்ந்தது. அந்த வகையில் தனது வீட்டிற்கு முன் புறமாக அமைக்கப்பட்ட ஞான வைரவர் ஆலயத்தின் பூஜை, பராமரிப்பு என்பவற்றை மிகவும் நேர்த்தியான முறையில் மேற்கொண்டார். மேலும் இவர் முள்ளியவளையில் இருந்த காலத்தில் அவரது மனைவியின் தாயார் காலமானபோது அவருக்கு செய்யவேண்டிய அபரக் கிரியைகளை செய்வதற்கு அவ்வூரில் குருமார் எவரும் இல்லாத காரணத்தினால் தான் முன்பு கற்று வைத்திருந்த அபரக் கிரியையை முதன் முதலாக தனது மனைவியின் தாயாருக்கு செய்து வைத்தார்.

இதனைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் தங்களுக்கு இவ்வாறான கிரியைகளை ஆற்றக்கூடியவர்கள் அவ்வூரில் இல்லாத காரணத்தினாலும், கிரியை முறைகளை இவர் மிகவும் திருப்தியான முறையில் செய்கின்றார் என்பதாலும் இவரை, அவ்வூரில் இடம்பெறும் அபரக் கிரியைகளை செய்ய வேண்டுமென மிகவும் வினயத்துடன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவ்வூரில் குருக்கள் ஐயா என எல்லோராலும் நேசிக்கப்பட்டதுடன், தனது இந்து சமயத் தொண்டை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு மிகவும் திறம்படச் செய்து வந்தார்.

இவ்வாறு சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வந்த இவர் காலத்தின் கோலம் காரணமாக இடம்பெற்ற வன்னி மக்களின் பேரவல இடப்பெயர்வின்போது கடைசிவரை அங்கிருந்துவிட்டு இறுதியில் வவுனியா வந்து பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்களின் அன்பான அரவணைப்பில் தனது நொந்த உள்ளத்தையும் உடலையும் தேற்றிவந்த வேளையில் காலனவனின் கணக்கு வந்துவிட்டது.

தாராள மனதும், இரக்க சுபாவமும் கொண்ட இவர் ஊர் மக்களால் பதுமை ஐயர், பதுமண்ணா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டார். ஒரு மதத்தின் அடையாளச்சின்னமாக இருந்தாலும், பிற மதங்களையும் நேசித்த ஆனால் மத மாற்றங்களை வன்மையாகக் கண்டித்த உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் அவர்கள் தனது 71 ஆவது வயதில் 04 .11 .2009 புதன் கிழமை அன்று காலைப் பொழுதில் இறைவன் திருவடி சேர்ந்தார். தனது நாளாந்தக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு தன்வீட்டு பூஜை அறையில் இறைவனை பூக்களால் அலங்கரித்துவிட்டு அடுத்த சில நொடிகளில் உடல் தளர்ந்து வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அரை மணி நேரத்துக்குள் அன்னாரின் ஆத்மா உடலைவிட்டு பிரிந்தது.....

திதி வெண்பா...
ஆண்டு விரோதியின் ஐப்பசித் திங்களது
அபரபக்க துதியை திதி தனில்
பதுமு என்னும் செம்மல் மயில்வாகனனார்
பரம்பொருள் நல்லடி சேர்ந்தார் சிறந்து!!!!!


ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!