முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்.. முயன்று முயன்று முன்னேறு... முயன்று பார் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பாய் இது நமது முன்னோர்களின் மொழி. எங்கள் வாழ்வில் என்றுமே கூட வரும் முது மொழிகள். இலட்சியப் பயணத்தில்தான் மனிதனுக்கு எத்தனை இடையூறுகள். அத்தனையையும் தாண்டி வெற்றியை அடைவதென்பது ஒன்றும் சாதாராண விடயம் இல்லைத்தான். உயர்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிதான் வெற்றியின் அடிப்படை.
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பித்து கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி, அந்த இணைய பக்கத்தில் தொடர்ச்சியாக பாடல்களை ஒலிபரப்பி, கல்லூரிக் கால நண்பர்களில் பலரும் கூட வருவார்கள் என்று நம்பி ஏமார்ந்து, கடைசியில் பிந்தி வந்து இணைந்த ஒரு நட்புடன்.. அந்த நட்பின் அர்ப்பணிப்புடன் வானொலிக்கான அறிவிப்பாளர்களை தெரிவு செய்து, போதுமான பயிற்சிகளை வழங்கி, கடந்த மே 07ஆம் திகதி முல்லைத்தீவில் Vanavil Media Networks அலுவலகத்தை திறந்துவைத்து அதன் பின்னர் மே 18ஆம் திகதி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து.. இவையெல்லாம் நடப்பது யுத்தத்தின் கொடிய வடுக்களுடன் காட்சி தரும் முல்லைத்தீவில் என்பதுதான் இங்கு முக்கியம்.
உண்மையில் கொழும்பிலோ அல்லது வேறு ஒரு வசதிகளுடன் கூடிய இடத்திலோ இணைய வானொலியை ஆரம்பிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் முல்லைத்தீவில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்தான்.
நோக்கம் சிதறாமல் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றோம். வெற்றி என்றால் அது சாதாரண வெற்றி அல்ல. இன்று இலங்கையிலிருந்து இணையத்தில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் அதிகமான நேயர்களை சென்றடையும் தமிழ் வானொலியாக வெற்றி பெற்றோம்.. மேலும் இப்போது இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் ஒரேயொரு இணையத்தள வானொலியாகவும் உள்ளோம் (பல வானொலிகள் உள்ளன ஆனால் நிகழ்ச்சிகளை படைக்கும் வானொலி என்றால் வன்னி fm சஞ்ஜீவ ஒலி மட்டுமே!)
எமது வெற்றிக்காக நாம் ஒன்றும் பணத்தையோ அல்லது பொருளையோ முதலீடு செய்யவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாம் நமது வானொலி பற்றி வேறு எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரம் செய்யவில்லை. முக நூலில் உள்ள நமது நண்பர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தினோம்.. நமது நண்பர்கள் தாமாக முன் வந்து தங்கள் நண்பர்களுக்கும் அந்த நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கும் என்று இன்று ஏராளமானவர்கள் வன்னி fm சஞ் ஜீவ ஒலியுடன் இணைந்துள்ளார்கள்..
சஞ்ஜீவ ஒலி என்ற பெயருடன்தான் ஆரம்பித்தோம். எனினும் வன்னி என்பதை அடையாளப்படுத்தும் நோக்குடனும் ஏராளமான நேயர்களை சென்றடையும் நோக்குடனும் வன்னி fm சஞ்ஜீவ ஒலி என்ற பெயருடன் நேயர்களை சென்றடைகின்றோம். உண்மையில் நமக்கு பின்னால் எந்தவொரு அரசியல் பலமோ அல்லது நிறுவன பலமோ இல்லை. எப்பொழுதும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நமது நேயர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து செயற்படுவதே வன்னி fm சஞ்ஜீவ ஒலியின் மிகப் பெரிய பலமாகும்.
எனவே இதனை கருத்திற்கொண்டு நாம் யாரிடமும் அடிபணியாத Vanavil Media Networks என்கின்ற நிறுவனத்தை அமைத்து அதன் கீழ் வன்னி fm சஞ்ஜீவ ஒலியாக உலகெங்கும் வலம் வருகின்றோம். இந்த வானொலியை ஆரம்பித்தது முதல் இன்றுவரை நம்முடன் இணைய அல்லது நம்மை விலை கொடுத்து வாங்க நினைத்து தோற்றுப்போன நிறுவனங்கள், அரசியல் சக்திகள் பல/பலர்.. (நோகாமல் நொங்கு குடிக்க நினைக்கிறாங்கப்பா.) ஆனாலும் நமது Vanavil Media Networks என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதனை நாம் செவ்வனவே நிறைவேற்றுவோம், நிறைவேற்றுகிறோம்.
Vanavil Media Networks ஐ உருவாக்கியமையின் நோக்கம் ஒன்று சஞ்ஜீவ ஒலி (வன்னி fm சஞ்ஜீவ ஒலி) வானொலியை இந்த நிறுவனத்தின் கீழ் செய்வதாகும். மேலும் இன்னும் பல செயற்றிட்டங்களும் நம்மிடம் உள்ளது. முதலாவது வானொலி என்றால் இரண்டாவது மாதம் இரு முறை வெளிவரும் பல்சுவை சஞ்சிகை. அடுத்தது அழிந்து போன முல்லை மண்ணில் ஒரு பிரமாண்டமான இசைக் குழுவை அமைப்பது. இந்த வேலைத்திட்டங்களையும் இப்போது Vanavil Media Networks செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. இவை அனைத்தும் இன்னும் சில நாட்களுக்குள் வெற்றி பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இப்போது நாம் முன்னெடுக்கும் இன்னுமொரு முயற்சிதான் முல்லைத்தீவுக்கென ஒரு தமிழ் சங்கத்தை அமைத்தல். இதற்காக கற்றோர்களையும், அறிஞர்களையும், கலைஞர்களையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி வருகின்றோம். நமது இந்த முயற்சியும் வெற்றிப்பாதையிலையே உள்ளது. இவை இவ்வாறு இருக்க நம்முடன் வன்னி fm சஞ் ஜீவ ஒலியில் இணையும் நேயர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி எப்போது பண்பலையில் வன்னி fm சஞ் ஜீவ ஒலி ஒலிபரப்பாகும்.?
இந்த கேள்விக்கும் இப்போது மெல்ல மெல்ல விடை கிடைத்துள்ளது. ஆம் மிக விரைவில் வன்னி fm சஞ்ஜீவ ஒலியை முல்லைத்தீவின் வானலைகளில் பண்பலையில் செவிமடுக்க முடியும். இதற்கான அடிப்படை வேலைகளை செய்து வருகின்றோம். விரைவில் உங்கள் மேலான அன்புடனும் ஆதரவுடனும் பண்பலையில் பவனி வருவோம்.
நாங்கள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் சொந்தக் காரர்கள் நீங்களே.. நமது ஒவ்வொரு முயற்சியையும் எப்போதும் எங்களுடன் இணைந்துள்ள உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் ஆரம்பிக்கிறோம்.. பெறுகின்ற ஒவ்வொரு வெற்றிகளையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்... நன்றி... நன்றி... நன்றி...
Thursday, August 11, 2011
Subscribe to:
Posts (Atom)