உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, January 30, 2010

ஜனாதிபதித் தேர்தல்!!!! முடிவுகள் சொல்லும் செய்திகள்...

உள்நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகளாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்து ஆறாவது ஜனாதிபதியாக ஆளும் கட்சியின் பிரதான வேட்பாளராகக் களம் புகுந்த மகிந்தராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். உண்மையில் இந்தத் தேர்தலில் பெரும்பாலான ஆய்வுகள் கருத்துக் கணிப்புக்கள் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவே அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்வுகூறியிருந்தன. இன்னும் சில ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுகளில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றும் சில வேளைகளில் இருவருமே ஐம்பது வீத வாக்குக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் அனைத்து கருத்துக் கணிப்புக்களையும் எதிர்வு கூறல்களையும் பொய்யாக்கி கிட்டத்தட்ட பத்தொன்பது இலட்ச வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கும்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இந்த ஜனாதிபதித் தேர்தலில் பதின்நான்கு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலை வகித்ததாகவும் ஆனால் ஆளும் கட்சியின் அழுத்தத்தின் பிரகாரம் தேர்தல் திணைக்களம் தனது வெற்றியை அரசாங்கத்தின் வெற்றியாக அறிவித்ததாகவும் சொல்லியுள்ளார். இதுதொடர்பில் ஐக்கியதேசியக் கட்சி நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இணைய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் இவ்வாறான குற்றச்ச்சாட்டுக்களை முன்வைக்கின்றபோதிலும் இவற்றை நிரூபிக்கக் கூடிய வகையில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை, மேலும் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட அமைப்புக்கள் இந்தத் தேர்தல் நீதியான முறையில் நடைபெற்றதாக சொல்லியுள்ளமையையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்தவரும், இன்னுமொரு வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் எதிர் முனைகளில் போட்டியிட்டமை இதுவே முதற்தடவையாகும் என்பதுடன் சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் முன்னின்ற இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலை. இவ்வாறன ஒரு சூழலில் இலங்கையில் உள்ள இருபத்தியிரண்டு தேர்தல் மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாகவுள்ள ஆறு மாவட்டங்களில் மாத்திரமே எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். ஏனைய பதினாறு மாவட்டங்களிலும் சிங்கள மக்கள் தங்கள் தலைவராக மீண்டும் மகிந்தராஜபக்ஷவையே தெரிவு செய்துள்ளார்கள்.

உண்மையில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குறிப்பாக வடகிழக்கில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றமைக்கு இரண்டு விடயங்களை காரணங்களாக சொல்ல முடியும். ஒன்று தமிழ் சமூகம் தற்போதைய ஆளும் கட்சி ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் திருப்தி கொள்ளாமல் மாற்றம் ஒன்றை விரும்பியிருக்கலாம், அல்லது தமது தேசியக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட்டு சரத் பொன்சேகாவிற்கு மக்கள் வாக்களித்திருக்கலாம்.

எது எப்படியோ கடந்த பாராளுமன்றத்தில் தமது தேசியக் கட்சியான தமித் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்த தமிழ் சமூகம் நிச்சயமாக இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வழிநடத்தப்பட்டதாகவே தெரிகின்றது. இங்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியில் இருக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசுக்கு அதாவது ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தபோதிலும் கிழக்கு மாகான மக்கள் பொன்சேகாவிற்கு வாக்களித்துள்ளார்கள் என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள செல்வாக்கை மீண்டுமொரு முறை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் அண்மைக்காலமாக யாழ் மக்களின் அபிவிருத்தி, வட மாகாண மக்களின் நலன் என்று சொல்லி அரசியலில் பயணித்த அரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு இருந்தும் தமிழ் சமூகம் தமித் தேசியக் கூட்டமைப்பின் தெரிவான சரத் பொன்சேகாவை ஆதரித்திருப்பதன் மூலம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலின் நீதி, நேர்மை தொடர்பில் வலுவான சந்தேகம் எழுகின்றது.

இங்கு ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட கிழக்கில் அமோக வெற்றியீட்டி 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போது தேர்தல் மோசடி, புலிகளின் வன்முறை, நீதியற்ற தேர்தல் போன்ற காரணங்களைச் சொன்ன வடகிழக்கை சேர்ந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ் கட்சிகளினால் இந்தத் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததாக கூறமுடியாத நிலை. அதாவது ஜனாதபதியாக மகிந்த வெற்றி பெற்றுள்ளமையால் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததாகக் கூற முடியாத நிலைக்கு மேற்படி கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

இப்படியான ஒரு சூழலில்தான் அரசாங்க அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து பின்னர் இன்றைய தினம் காலையில் அந்த முடிவை மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக சொல்லியுள்ளார்.
இவ்வாறான விடயங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற போது இலங்கையில் அடுத்துவருகின்ற பொதுத் தேர்தலில் இந்தத் தமிழ்க் கட்சிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் ஓரளவுக்கு ஊகிக்க முடிகின்றது..

உண்மையில் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் இப்போது அவர்களிடம் போதுமான அரசியல் அடிப்படைத் தெளிவு இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். தமிழர்கள் வன்னி இறுதி யுத்தத்தில் முன்னின்ற சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா??, தமிழ் வேட்பாளர் ஒருவருக்கே வாக்களிப்போம் என்று சிந்தித்து சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து வாக்குகளை சிதறடிக்காமை இதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் தமிழ் சமூகம் இனவாத சமூகம் அல்ல என்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஆனால் சிங்கள சமூகம் தமது இனவாத கட்டமைப்புக்குள் இருந்து இன்னமும் வெளிவராதவர்களாகவே உள்ளார்கள். இந்தத் தேர்தலில் இடது சாரிக் கொள்கைகொண்ட விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு சிங்கள மக்களிடம் கிடைத்திருக்கும் மிகக் குறைந்தளவு வாக்குகள் இதனை எடுத்துகாட்டுவதாக உள்ளன. அத்துடன் சரத் பொன்சேகா இந்தத் தேர்தலில் சிங்கள மக்கள் அதிகம் வாழும் தேர்தல் மாவட்டங்களில் தோல்வியடையக் காரணமாக இருந்தமையும் அவர் இனவாதம் பேசியது சிங்கள மக்களுக்கு திருப்தியளிக்காமைதான்.

அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சரத்பொன்சேகாவுக்கு கிடைத்தததும் சிங்கள சமூகத்திடம் அவர் தோல்வியடையக் காராணமாக இருந்ததையும் மறுக்கமுடியாது. அதாவது சிங்களவர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடத்தில் சரத் பொன்சேகாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உடன்பாடுகள் தொடர்பில் பிழையான கற்பிதமளிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றியும் சிங்கள அரசியல் கட்சிகள் தவறான ஒரு கண்ணோட்டத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன.

எனவே இவ்வாறான ஒரு பின்னணியில் சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஏற்க மறுத்துள்ளார்கள். சிங்கள மக்களிடத்தில் இனவாதம் எவ்வளவுக்கு வளர்க்கப்பட்டுள்ளது என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறான நிலைமை காலங் காலமாக தொடர்கின்ற ஒன்றுதான். அதாவது தமிழர் தரப்புடன் நெருங்கி வருகின்ற கட்சிகளை அதற்கு போட்டியாக உள்ள கட்சியின் பிரசாரங்களால் சிங்கள மக்கள் நிராகரிப்பது காலங்காலமாக தொடர்வதுதான். கடந்த ஐக்கிய தேசியின் ஆட்சி 2004 ஆம் ஆண்டில் பறிபோனதும் இதனால்தான்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ஒரு போதுமே அரசியல் ரீதியில் ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை எந்தவொரு ஆட்சிக்கு வருகின்ற கட்சியாலும் முன்வைத்து நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மையாகும்.இந்த நிலையில்தான் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மகிந்தராஜபக்ஷ அடுத்த பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறும் தமிழ் அரசியல் கட்சியுடன் இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதாக சொல்லியுள்ளார். இப்போது பாராளுமன்றத்தில் அதிக ஆசனத்துடன் இருக்கும் தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மேலும் தமித் தேசியக் கூட்டமைப்புக்கு வடகிழக்கில் உள்ள செல்வாக்கை ஜனாதிபதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நன்கு அறிந்திருப்பார்.

அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளாரா??? அல்லது இது அடுத்த தேர்தலில் தன்னுடன் உள்ள தமிழ்க் கட்சிகளை ஒன்று சேர்த்து நீதியற்ற முறையில் வெற்றி பெறச் செய்து அரைகுறைத் தீர்வுத் திட்டமொன்றை தமிழர்கள் மீது திணிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட கருத்தா??? தமிழ் சமூகம் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆலோசனை வழங்கிய புத்தி ஜீவிகள் தமிழ் சமூகத்தை இன்னும் தெளிவுபடுத்த வேண்டும்.

Saturday, January 23, 2010

ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம்.- 02

தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தனி நாட்டுக் கொள்கை ஒன்றும் எழுந்தமான சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அதாவது இந்த கொள்கை சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இங்கு தனித் தேசம் ஒன்று தோற்றம் பெறுவதற்கான சர்வதேச நியமங்கள் தொடர்பிலும், அதன் அடிப்படையில் தமிழ்ச் சமூகம் இலங்கையில் ஒரு தனித் தேசத்தை கட்டியமைக்கும் உரிமைகள் தொடர்பிலும், அதனை சிங்களத் தலைமைகள் கடந்த காலங்களில் எவ்வாறு கையாண்டிருந்தன என்பது பற்றியும் நோக்குவோம்.

ஒரு தனித் தேசத்துக்கான உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் ஐந்து அடிப்படை விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

01 ) தொடர்ச்சியான தொன்மையான நிலப்பரப்பு.
02 ) அந்த நிலப்பரப்பிற்கேற்ற குடிப்பரம்பல்.
03 ) தொன்மையான மொழிப்பயன்பாடு.
04 ) தன்நிறைவுப் பொருளாதாரம். (உணவுத் தேவைக்கு)
05 ) நீண்ட வரலாறுடன் கூடிய கலை கலாச்சாரம்.

இவையே ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள மேற்படி ஐந்து அடிப்படை அம்சங்களுமாகும்.

தொடர்ச்சியான தொன்மையான நிலப்பரப்பு.

ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஐந்து அடிப்படை அம்சங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்தவகையில் ஒரு குறிப்பிட்ட துண்டுபடாத தொடர் நிலப்பரப்பில் நீண்ட வரலாறுடன் ஒரு குறித்த இனம் வாழ்ந்துவர வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

உண்மையில் இலங்கையைப் பொறுத்தவரையில் லாட நாட்டிலிருந்து வந்த விஜையனதும், எழுநூறு தோழர்களினதும் வருகையைத் தொடர்ந்தே ஆரிய இனம் (சிங்களவர்கள்) இங்கு வருகை தந்ததாக வரலாற்றின் வழியே அறியமுடிகின்றது. மேலும் முஸ்லீம் சமூகமும் வியாபார நோக்கில் இங்கு வருகை தந்ததாகவும் சொல்லப்படுகின்றது. (இதை அவர்கள் மறுக்கவுமில்லை.)

ஆனால் தமிழ் இனம் இலங்கைக்கு எப்போது வந்தார்கள் என்பது தொடர்பில் எந்தவொரு வரலாற்று குறிப்புக்களும் இல்லை என்பதுடன் இலங்கையின் பூர்வீகக் குடிகளான இயக்கர், நாகர் பரம்பரையில் நாகர் குலத்திலிருந்து வந்தவர்களே தமிழர்கள் என்றும் நம்பப்படுகின்றது.

எனவே இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற போது தமிழ் இனம் இந்த நாட்டுக்கு வந்தேறு குடிகளல்ல என்பதுடன் தமிழர்களே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் இந்தத் தமிழ் இனம் நாகர் காலம் முதலே இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பில் வாழ்ந்து வந்தமை வெள்ளிடை மலை.

இவ்வாறாக தமிழ் இனத்திற்கென ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பு தொன்றுதொட்டே உள்ளமை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் "தொடர்ச்சியான, தொன்மையான நிலப் பரப்பு" என்கின்ற அம்சத்துடன் பொருந்துகின்றமை தமிழ்ச் சமூகத்துக்கு பிரிந்து சென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்குவதற்கு சாதகமாக உள்ளது.

தமிழ் சமூகத்திடம் ஒரு தொன்மையான, தொடர் நிலப்பரப்பு உள்ளதை நன்கு அறிந்துதான் சிங்களத் தலைமைகள் வடக்குக் கிழக்கு பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டன. இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை சிங்களத் தலைமைகள் வடக்குக் கிழக்கு மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களில் அமைத்துள்ளமை இதனை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

அந்தவகையில் வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தையும் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கும் நோக்கில் "வெலிஓயா" குடியேற்றமும், கிழக்கில் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பிரிக்கும் வகையில் "அல்லைக் கந்தளாய்" குடியேற்றமும், மட்டக்களைப்பையும், அம்பாறையையும் பிரிக்கும் நோக்கில் "கல்லோயா" குடியேற்றமும் சிங்களத் தலைமைகளால் இந்த நோக்கத்துக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களில் மிகவும் முக்கியமானவையாகும். தவிர மாவட்டங்களின் உட்பகுதியிலும் திட்டமிட்ட பல சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த நிலப்பரப்பிற்கேற்ற குடிப்பரம்பல்.

இலங்கையில் தமிழ்ச் சமூகத்தின் வீதத்தை சிங்கள இனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோதும் வட கிழக்கில் செறிவாக வாழ்ந்த, வாழ்ந்துவருகின்ற தமிழ்ச் சமூகத்தின் எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபோதும் நமது இனம் போதியளவு குடிப்பரம்பலுடனே உள்ளது.அதாவது மாகாணப் பிரிப்பில் ஏழு மாகாணங்களில் சிங்களவர்களும், இரண்டு மாகாணங்களில் தமிழர்களும் என்ற அடிப்படையில் இதனை நோக்கலாம்.

மேலும் இப்போது தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரர்களையும் ஒரு தனித் தேசத்துக்குள் உள்வாங்கும் போக்கு உள்ளமையால் இது மேலும் வலுவடைகின்றது. அதுமட்டுமன்றி அண்மையில் தனி தேசப் பிரகடனம் செய்த கொசோவா போன்ற நாடுகளின் குடிப்பரம்பல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போதும் நமது இனத்தின் குடிப்பரம்பலில், மக்கள் தொகையில் போதுமான தன்மை இருக்கின்றது.

இவ்வாறாக தமிழர்களுக்கு ஒரு தனித் தேசத்தை கட்டியமைக்க போதுமான மக்கள் தொகை, குடிப் பரம்பல் இருப்பதையும் சிங்களத் தலைமைகள் அன்று நன்கு அறிந்திருந்ததன் காரணமாகத்தான் வட கிழக்கின் அபிவிருத்திகளில் அக்கறை செலுத்தாமல் என்ன தேவை என்றாலும் அவற்றை கொழும்பு போன்ற இடங்களிற்கு வந்து நிறைவேற்ற வேண்டுமென்கின்ற நிலையை தோற்றுவித்து வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களை தலை நகர் கொழும்புக்கு இடம்பெயரச் செய்து வடகிழக்கில் தமிழர் செறிவை குறைக்க முயன்றன.

மேலும் சிங்கள தேசம் ஒன்றுபட்டு வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லீம்,தமிழ் சமூகத்துக்குள் கலவரங்களை ஏற்படுத்த முயன்றதும் இதன் அடிப்படையில்தான்.அத்துடன் திட்டமிட்ட இனக் கலவரங்களை ஏற்படுத்தி சிங்களத் தலைமைகள் தமிழர்களை வெளிநாடுகளுக்கு புலம்பெயரச் செய்ததும் இவ்வாறான ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே.

தொன்மையான மொழிப்பயன்பாடு.

நமது இனத்திற்கென மிகவும் தொன்மையான, இனிமையான எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் அமைந்த நம் தாய் மொழியாம் தமிழ் மொழி உள்ளமை "தொன்மையான மொழிப் பயன்பாடு" என்கின்ற அடிப்படை அம்சத்தில் நமக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு அரசியல் சாசனத்தை எழுதவோ, தொடர்பாடல்களுக்காகவோ ஒரு தனித் தேசத்திற்கென ஒரு சொந்த மொழி வேண்டும் என்கின்ற அடிப்படையில்தான் ஐக்கியநாடுகள் சாசனம் "தொன்மையான மொழிப் பயன்பாடு" என்கின்ற அம்சத்தை சேர்த்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் சமூகத்திடம் சொந்தமான ஒரு மொழி உள்ளமை எதிர்காலத்தில் அவர்கள் பிரிந்து செல்ல வலுச் சேர்க்கும் என்பதை நன்கு அறிந்ததன் விளைவாகத்தான் அன்றைய சிங்களத் தலைமைகள் தமிழ் மொழியை அரச கரும மொழிகளுக்குள் உள்ளடக்காமல் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தன. இதன் ஊடாக தமிழர்கள் அரச சேவைகளையும் இதர சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்காக சிங்களம் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழ் மொழியின் பயன்பாட்டை குறைக்கலாம், இலங்கையில் தமிழ் மொழியை அழித்துவிடலாம் என்று சிங்களத்தலைமைகள் சிந்தித்தன.

எது எப்படியோ நமது தந்தை செல்வநாயகம் போன்ற அரசியல் தலைமைகளால் இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.இலங்கையில் ஒரு தனித் தேசம் உருவாக்க நமக்கென ஒரு மொழி வேண்டுமென்கின்ற அடிப்படையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட தமது கட்டுப் பாட்டுப் பகுதியில் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியதாக நம்பலாம்.


தன்நிறைவுப் பொருளாதாரம். (உணவுத் தேவைக்கு)

உண்மையில் ஒரு புதிய தேசத்தின் உருவாக்கம் இன்னுமொரு நாட்டில் பொருளாதாரத்தை சுரண்டும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்கின்ற வகையில்தான் "தன்நிறைவுப் பொருளாதாரம்" என்னும் அம்சம் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே ஒரு தேசத்துக்குள் வாழ்ந்து பின்னர் பிரிந்து செல்வதனால் அந்த மக்களால் புதிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்.


எது எப்படி இருப்பினும் இலங்கைத் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யும் அளவுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏராளமான வளங்களை தன்னகத்தே வைத்திருக்கின்றார்கள். உதாரணமாக உணவுத் தேவைக்காக வட கிழக்கில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வயல், தோட்ட நிலங்கள் உள்ளன. அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கான கடல் வளமும் காணப்படுகின்றது. எனவே இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் இன்னுமொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு போதியளவு வசதிகளை தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது.


உண்மையில் சிங்களத் தலைமைகள் இந்த விடயத்திலும் தங்கள் பார்வையை பலமாகச் செலுத்தத் தவறவில்லை. அதாவது எவ்வளவோ வயல்,தோட்ட நிலங்களை சிங்களத் தலைமைகள் சிங்கள விவசாயிகளிடம் கையளித்த வரலாறுகளும் உண்டு என்பதுடன் வட கிழக்கில் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கு சிங்களத் தலைமைகளால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. இவை எல்லாம் நமது பொருளாதாரத்தை சிதைக்க சிங்கள தலைமைகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதித் திட்டங்களாகும்.

நீண்ட வரலாறுடன் கூடிய கலை கலாச்சாரம்.

தமிழ் சமூகத்துக்கென ஒரு கட்டமைக்கப்பட்ட கலாச்சாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் கலைத் துறை என்று வருகின்றபோது தமிழர்களுக்கு நிகர் யாருமே இல்லை என்கின்ற அளவுக்கு இயல்,இசை,நாடகம் என்கின்ற முத்தமிழும் முழங்கும் கலைத்துறை சான்றுபகர்கின்றது.

சிங்களத் தலைமைகளால் திட்டமிட்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது பல வரலாற்று ஆவணங்களை அழிக்கும் நோக்குடன் மட்டுமன்றி தமிழர்களின் பாரம்பரிய கலைத் துறைகள் தொடர்பான நூல்களை சிதைப்பதற்குமாகும். அத்துடன் ஆலயங்களில் சிங்களத் தலைமைகளால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகளும் இதன் நோக்கிலமைந்தவைதான் என்பதில் சந்தேகம் இல்லை.


இவ்வாறாக ஒரு தனித் தேசத்தை உருவாக்குவதற்கான சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டுள்ள தமிழ் இனம் தந்தை செல்வநாயகம் அவர்களினால் உருவாக்கப்பட்ட தனித் தேசக் கோட்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றால் மேற்சொல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து முக்கியமான அடிப்படை அம்சங்களில் எப்போதும் வலுவான நிலையில் இருப்பது அவசியமாகும்.

ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம் முற்றும்..

Saturday, January 16, 2010

ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம்.- 01

இலங்கையைப் பொறுத்தவரையில் கண்டி ராஜ்ஜியம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சி காண்பதற்கு முன்னர் அது ஒரு தனி தேசமாக ஒரு குடையின் கீழ் இருந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் குறைவு அல்லது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு முன்னர் இலங்கையில் பல்வேறு ராஜ்ஜியங்களும், சிற்றரசுகளும் இருந்தமையை மகாவம்சம் கூட உறுதிப்படுத்துகின்றது.

இந்த நிலையில் பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியின் காரணமாகத்தான் இலங்கையில் இன்றும் இன முரண்பாடுகள் தொடர்கின்றன. அதாவது இலங்கையில் இருக்கும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதே பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியின் பிரதான நோக்கமாக இருந்தது.

இவ்வாறாக பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியில் முதலாவதாக சிங்கள-முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் இன முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த கலவரத்தின்போது தமிழ் சமூகம் சிங்கள சமூகத்துக்கு ஆதராவாக இருந்தமையும், சேர் பொன் ராமநாதன் அவர்கள் சிங்களவர்களுக்காக பிரித்தானியா சென்று பேசியமையும், பின்னர் சிங்களவர்கள் அவரை தேரில் ஏற்றி இழுத்து வந்தமையும் வரலாறு.

இவ்வாறான ஒரு நிலையில்தான் இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கி பிரித்தானியர்கள் வெளியேறினார்கள். உண்மையில் சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கைக்குள் இன முரண்பாடுகள் பரவலாக இருந்தபோதிலும் அவை பூதாகரமாக வெளித்தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்தவகையில் சுதந்திரத்துக்கு பின்னர்தான் சிங்களவர்கள் தமிழ், முஸ்லீம் சமூகங்களை அடக்கியாள தொடங்கினார்கள்.

சிங்கள சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ், முஸ்லீம் சிறுபான்மைச் சமூகம் சாத்வீகமான வழிகளில் பல போராட்டங்களை முன்னெடுத்தது. இந்தப் போராட்டங்களில் தந்தை செல்வநாயகம் அவர்களின் பங்கு மிக மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தமிழ் சமூகத்திற்கான சமவுரிமை தொடர்பிலும், தமிழ் மொழியை அரச கரும மொழியாக்க வேண்டுமென்றும் தந்தை செல்வநாயகம் அவர்கள் உறுதியுடன் போராடினார்.தந்தை செல்வநாயம் அவர்கள் தன் வாழ்வின் பெரும் பகுதியை தமிழர்களுக்காகவும், அவர் தம் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழியின் இருப்பிற்காகவும் செலவிட்டவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

நியாயமான வழிகளில், சிறு துளியும் வன்முறைகள் இல்லாமல் தந்தை செல்வநாயகம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீக போராட்டங்களை சிங்களத் தலைமைகள் அடக்கு முறைகளையையும், வன்முறைகளையையும் கட்டவிழ்த்துவிட்டும், ஒப்பந்தங்கள் என்ற பெயரில் சில போலி நாடகங்களை அரங்கேற்றியும் தணித்துவிடலாம் என்று நினைத்தபோதிலும் தந்தை செல்வா அவர்கள் மிகவும் உறுதியுடனும், தெளிவுடனும் தனது போராட்டங்களை முன்னெடுத்தார்.

சிங்களத் தலைமைகளால் தந்தை செல்வநாயகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகிய இரண்டும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு ஒப்பந்தங்களுடன் இலங்கை-இந்திய ஒப்பந்தம், பிரபா-ரணில் ஒப்பந்தம் ஆகியனவும் அடங்கலாக தமிழர்கள் இதுவரை இன முரண்பாட்டிற்கான தீர்வைத் தேடித்தரும் என்று மொத்தம் நான்கு பிரதான ஒப்பந்தங்களை எதிர்பார்த்தார்கள். ஆனாலும் இவ் ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறியதுடன் அவற்றை கிழித்தெறிந்த பெருமையும் சிங்கள தலைமைகளையே சாரும்.

ஒப்பந்தங்கள், வன்முறைகள் என்று பல வழிகளிலும் தந்தை செல்வநாயகத்தின் போராட்டங்களை தணிக்க சிங்களத் தலைமைகள் முயன்று தோற்ற நிலையிலும், சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்கின்ற நிலையிலும்தான் "தமிழ் சமூகத்திற்கான ஒரே தீர்வு பிரிந்து சென்று தனித் தேசம் ஒன்றை நிறுவுவது" என்கின்ற தீர்மானம் வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்டது..

இவ்வாறாக தந்தை செல்வநாயகம் அவர்களால் எடுக்கப்பட்ட தனித் தேசம் என்கின்ற கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஜனநாயக வழிமுறைகளில் போராடுவதனால் எந்த வித பலனும் விளையப்போவதில்லை என்கின்ற நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி பல்வேறு ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

உண்மையில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் என்கின்ற நிலை இருந்தாலும் எல்லா ஆயுத இயக்கங்களினதும் உருவாக்க நோக்கம் ஆரம்ப காலங்களில் "தமிழீழம்" என்பதாகவே இருந்தது. அதாவது இயக்கங்களால் வேறுபட்டிருந்தாலும் எல்லா போராளிகளினதும் இலட்சியம் ஒன்றாகவே இருந்தது. இவ்வாறாக தோற்றம் பெற்ற ஆயுத இயக்கங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளட், ரெலோ, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈரோஸ் போன்றவை முக்கியமான இயக்கங்களாக காணப்பட்டன.இந்த இயக்கங்களில் ஆரம்ப காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பு மிகவும் பலம்பொருந்திய இயக்கமாக காணப்பட்டது.

இவ்வாறாக தோற்றம் பெற்ற இயக்கங்களுக்கு இந்தியா தனது பிராந்திய நலனின் அடிப்படையில் ஆயுதங்களை வழங்கியதுடன், ஆயுதப் பயிற்சிகளையையும் வழங்கியிருந்தது. அதாவது இலங்கையில் ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தால் அது தனது வல்லாதிக்க சக்திக்கு எதிர்காலத்தில் சவாலாக அமைந்துவிடும் என்பதே இந்திய தேசம் தமிழ் ஆயுதக் குழுக்களை ஊக்குவிக்க காரணமாக அமைந்திருந்தது. மேலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் இந்தச் செயலுக்கான காரணம் என்று சொல்ல முடியும்.

இந்தியா தனது அரசியல் தேவைகளுக்காக ஊக்குவித்த ஆயுத இயக்கங்கள் குறுகிய காலத்துக்குள் தம்மை வளர்த்துக் கொண்டமையாலும், எல்லா இயக்கங்களும் இலட்சியத்தால் ஒன்றுபட்டிருந்தமையாலும் எதிர்காலத்தில் இந்த இயக்கங்கள் மேற்குலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தம்மை மேலும் பலப்படுத்தி எல்லா இயக்கங்களும் ஒன்றுபட்டு இந்தியாவுக்கு எதிராக திரும்பினால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்கின்ற இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இயக்கங்களின் இலட்சியங்களைச் சிதைக்கும் செயலில் இந்தியா இறங்கியது. மேலும் தென்னிலங்கை அப்போது இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையும் இந்த செயலுக்கு வழிவகுத்தது.

இந்தியா தனது திட்டங்களை அரங்கேற்றுவதற்காக ஒவ்வொரு இயக்கங்களினதும் தளவைர்களை தமது நாட்டுக்கு அழைத்து மூளைச் சலவை செய்யத்தொடங்கியது. இதில் பல தலைவர்களுக்கு பணத்தாசையும், பதவியாசையும் ஊட்டப்பட்டது. அந்தவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைத் தவிர மற்றைய இயக்கங்களின் தலைவர்களிடத்தில் இந்தியாவின் மூளைச்ச் சலவை வெற்றியளிக்கவே ஒவ்வொரு இயக்கங்களும் தமது "தமிழீழம்" என்கின்ற கொள்கையிலிருந்து விலகிக்கொண்டன. இதனால் அதிருப்தியடைந்த குறித்த இயக்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இயக்கங்களைவிட்டு வெளியேறியதுடன், சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

இந்தியாவின் இந்த மூளைச் சலவையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வடக்கு கிழக்கிற்கான முதலமைச்சர் பதவி தருகின்றோம் போராட்டத்தை கைவிடும்படி இந்தியா கேட்டுக்கொண்ட போதிலும் பிரபாகரன் அதனை நிராகரித்ததாகவும், தமிழீழம் என்கின்ற கொள்கையிலிருந்து எந்தக் காலத்திலும் விலக முடியாது எனத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

உண்மையில் இன்று தமிழீழம் என்று பேசினால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய கொள்கை என்கின்ற அளவுக்கு தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழக் கொள்கையில் புலிகள் உறுதியுடன் இருந்துள்ளார்கள். இந்த நிலையில் இலங்கையில் ஒரு தனித் தேசம் அமைக்க தமிழர்களுக்கு உரிமை உண்டா?? அதாவது பிரிந்து சென்று ஒரு தனியரசை நிறுவுவதற்கான சர்வதேச நியதிகளுக்கு நமது இனம் உட்பட்டுள்ளதா?? என்பதனை ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம்-02 இல் நோக்குவோம்.

ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம் தொடரும்...

Thursday, January 14, 2010

தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டா?? தைப்பொங்கல் வாழ்த்துக்கள்...

தை பிறந்தால் வழி பிறக்குமென்பது காலம் காலமாக தமிழர்களின் மத்தியில் இருந்து வரும் ஒரு நம்பிக்கையாகும். அந்த வகையில் பல இழப்புக்களையும், துன்பங்களையும் சுமந்துகொண்டிருக்கும் தமிழர்கள் இந்தத் தைப்பொங்கலையும் அன்புடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்த நிலையில் தைப்பொங்கலும் வந்துவிட்டது. ஆனபோதிலும் எமது எத்தனையோ உறவுகள் சொந்த வீட்டில் சொந்த பூமியில் தைப்பொங்கலை கொண்டாட முடியாத அளவுக்கு நிலைமை அமைந்துள்ளமை துரதிஸ்டவசமானது.

இவ்வாறான சூழ்நிலையில் தைப்பொங்கலை நம்மவர்கள் கேளிக்கைகளை குறைத்து கொஞ்சம் அடக்கமாகத்தான் கொண்டாடியிருக்கின்றார்கள். குறிப்பாக புலம்பெயர் வாழ் சொந்தங்கள் தாயகத்தின் நிலைமைகளை கருத்தில்க்கொண்டு இந்தப் பொங்கலை வரவேற்றிருக்கிறார்கள். உண்மையில் நன்றி மறப்பது நன்றன்று என்பதுக்கு இணங்க சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக உழவர்களும், சூரியனுக்கும், உழவர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக ஏனையவர்களும் கொண்டாடும் பண்டிகைதான் தைப்பொங்கல் என்று அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் ஒரு புதிய கண்டுபிடிப்பாக சில வருடங்களுக்கு முன்னர் தைப்பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானவர்களைப் போலவே எனக்கும் இதில் உடன்பாடு கிடையாது. அதாவது தமிழ் மரபின்படி தை மாதம்தான் வருடத்தின் முதலாவது மாதம் என்று சொல்வதற்கில்லை. ஆங்கில நாட்காட்டிகளின் பிரகாரம்தான் தைமாதத்தை வருடத்தின் முதலாவது மாதமாக நாம் கொள்கின்றோமே தவிர தமிழ் மரபின்படி சித்திரை மாதமே வருடத்தின் முதலாவது மாதம் என்பது காலங்காலமாக நமது மரபின் வழி தொடர்கின்ற ஒரு விடயம்.

எனவே தமிழ் நாட்காட்டியின் பிரகாரம் தைப்பொங்கல் தைமாதம் முதலாம் திகதி வருகின்றது என்பதற்காக அதனை தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வது பொருத்தமற்றது. மேலும் தைப்பொங்கலை தமிழர்கள் என்ன நோக்கத்துக்காக கடைப்பிடிக்கின்றார்களோ அதனை இது சிதைக்கும் என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும். மேலும் சித்திரை வருடப்பிறப்பு (தமிழ்ப் புத்தாண்டு.) சூரியன் முதலாவது ராசியான மேட ராசியிலிருந்து இறுதி ராசியான மீன ராசியில் சஞ்சரிக்கும் நாளில் அனுஷ்டிக் கப்படுகின்றது.

உண்மையில் நமக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதற்காக நம் முன்னோர்கள் வகுத்த சித்திரைப்புத்தாண்டை மாற்றி தைப்பொங்கலை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பது பொருத்தமற்றது. ஒரு விடயம் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதனை இறுதி வரை அதே நோக்கத்துக்காக பயன்படுத்துவது முக்கியமானது.

இங்கு தைப்பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை என்கின்ற நிலை மாறி அது இந்துக்களின் பண்டிகை என்கின்ற நிலை தற்போது காணப்படுகின்றமை வருத்தத்துக்குரியது. நமது முன்னோர்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருந்த போது எல்லா தமிழர்களும் தைப்பொங்கலை கொண்டாடியதனால் அது தமிழர்களின் பண்டிகையாக இருந்தது. எனினும் இப்போது தமிழர்கள் மத்தியில் பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் உள்ளமையினால் தைப்பொங்கல் இந்துக்களுக்கான பண்டிகை என்கின்ற அடையாளத்துடன் உள்ளது.

எது எப்படி இருப்பினும் தைப்பொங்கல் வேறு தமிழ்ப் புத்தாண்டு வேறு என்பது எனது கருத்து. மேலும் எனது வலைத் தளத்துக்கு வந்து செல்லும் வாசகர்களுக்கும், கருத்துரைகளால் உற்சாகம் தரும் உறவுகளுக்கும், திரட்டிகளில் எனது பதிவுகளுக்கு வாக்களிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிமையான தைப்பொங்கல் வாழ்த்துக்கள். இந்த தைப்பொங்கல் நாளில் உங்கள் அன்பையும், ஆதரவையும் இன்னும் இன்னும் எதிர்பார்ப்பதுடன் பதிவுகளும், பார்வைகளும் தொடரும்...

Saturday, January 9, 2010

ஜனாதிபதித் தேர்தல்!!!! இலங்கை அரசியல் கலங்கிய குட்டை...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு அதன் பரபரப்பு மக்களிடத்தில் தொற்றிக் கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தந்தையார் வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பனாகொடை இராணுவ முகாமில் தனது 86 ஆவது வயதில் காலமானார் என்கின்ற செய்தி வெளியாகியது.

இந்த நிலையில் காலஞ் சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் அவரின் உறவினர்களின் வேண்டுதலுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் வல்வையில் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளன. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயாரை சிவாஜிலிங்கத்தின் பொறுப்பில் விடுதலை செய்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் 22 பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதொடர்பான இறுதித் தீர்மானங்களை எடுத்த கூட்டத்துக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை என்று தெரிகிறது.

அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி வெளிநாட்டில் தங்கியிருப்பதாலும், பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் கைது செய்யப்பட்டிருப்பதனாலும் இந்தக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோர் கட்சிக் கொள்கைகளுக்கு கட்டுப்படாத காரணத்தினாலும் மேற்படி கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறாக பல பல சிக்கல்களுக்கு மத்தியில் எல்லா அரசியல் முடிச்சுக்களையும் முடிந்தவரை அவிழ்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா-சம்பந்தன் கட்சியின் கட்டுக்கோப்பு குலையாமல் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றமை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு சரியானதா?? என்கின்ற கேள்வி பொதுவாக எல்லோரிடமும் இயல்பாக எழுந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதைவிட நல்ல முடிவை எடுக்க முடியாது என்கின்ற நிலையிலையே இந்த முடிவுக்கு வந்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 20 தமிழ்ப் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்றும், பேரம் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் கூறியதன் அடிப்படையில் பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர் தங்களால் முடிந்தளவு பேரம் பேசியே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாக தெரிகின்றது.

அந்தவகையில் வடக்குக் கிழக்கு இணைப்பு, கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் விடுதலை, இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு என்கின்ற மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய சாதகமான பதில்களின் அடிப்படையிலையே இந்த ஆதரவு முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது. இவை தொடர்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் பேசிய போது வடக்குக் கிழக்கு இணைப்பை அவர் நிராகரித்ததாக தெரிகின்றது.

எனவே தனது கட்சி அங்கத்தவர்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் அதே நேரம் கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இதனைவிட இன்னுமொரு நல்ல முடிவை எடுக்கமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் 20 புத்தி ஜீவிகள் ஒன்றாக வெளியிட்ட அறிக்கை தொடர்பிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அத்துடன் இந்த புத்திஜீவிகள் மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கவும் இடமுண்டு.

எது எப்படியிருப்பினும் தீர்க்க தரிசனமும், தூர நோக்கும் கொண்ட அரசியல் முடிவுகளை எடுப்பதற்கும், தமிழ் அரசியல் தலைமைகளை வழிநடாத்திச் செல்வதற்கும் பொருத்தமான தமிழ்ப் புத்திஜீவிகள் அரசியலுக்குள் நேரடியாக ஆலோசகர்களாகவும், வேட்பாளர்களாகவும் களமிறங்க வேண்டியது இன்றைய தமிழர் தரப்பு தேவையாக உள்ளது என்பதையும் கவனத்தில்க் கொள்ள வேண்டும்...

ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான நிலைமைகள் இவ்வாறு இருக்க அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரான சிவாஜிலிங்கத்திடம் காலஞ் சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடலை கையளித்து இறுதிக் கிரியைகளை அவரின் பொறுப்பில் ஒப்படைத்தமை சிவாஜிலிங்கத்துக்கு மேலும் அரசியல் பலத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்வு கூறப்படுவதுடன், இதனைக் கொண்டு தமிழ்ச் சமுகத்தின் வாக்குகளை சிதைப்பது அரசின் நோக்கமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டலாம், அதாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவந்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் வாங்கப்போவதில்லை என்றும், முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் பிரபாகரனின் பெற்றோரை வைத்து அரசியல் பேசினார்கள்.

நிலைமை இவ்வாறாக இருக்க இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் மும்முரமான பிரச்சாரங்களில் குதித்துள்ளார்கள். அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகா உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுமென்று அறிவித்தார். மேலும் தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாளைய தினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். அரசாங்கம் ஏற்கனவே தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக கடும் பிரயத்தனம் எடுத்துள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரலிற்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இன்னுமின்னும் கடும் முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

உண்மையில் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் அது பல பலவீனங்களைக் கண்டுவருவதாகவே தெரிகின்றது. அந்தவகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரதியமைச்சர் செல்லச்சாமி விலகிச்ச் சென்று ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கின்றார். அத்துடன் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகிச்சென்று அரசாங்கத்துடன் இணைந்திருந்த மட்டக்களப்பு நகர மேயர் சிவகீத்தா பிரபாகரனும் ஜெனரலின் "நம்பிக்கைக்குரிய மாற்றம்" என்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியினருடன் இணைந்துள்ளார்.மேலும் சனல் 4 தொலைக்காட்சி ஒளி நாடா தொடர்பிலும் அரசு சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றது.

இந்த நிலையில் அண்மையில் மறைந்த அமரர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பிப் பலன் இல்லை என்றும் இந்தியா இனப்பிரச்சினைத் தீர்வில் உதவப்போவதில்லை என்றும் மக்கள் தமக்கான உரிமைகளை தாமே பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஒரு பத்திரிக்கை நேர்காணலில் சொல்லியுள்ளார்.

ஆக மொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்றபோது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்ப்பால் இலங்கை அரசியல் கலங்கிய குட்டை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.

இலங்கையணி அபாரம், இறுதிப் போட்டிக்கும் தெரிவு...

இலங்கை- இந்திய -பங்களாதேஷ் அணிகள் விளையாடும் முத்தரப்புத் தொடர் கடந்த நான்க்காம் திகதி பங்களாதேஷின் தலை நகர் டாக்காவில் மிர்பூர் மைதானத்தில் இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பித்து இதுவரையில் நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன, அந்தவகையில் இந்தத் தொடரில் இதுவரையில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கையணி மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்டுள்ளது. மேலும் மூன்று போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த முத்தரப்பு தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 31 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தது இலங்கையணி. அந்த வகையில் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்துமாறு பங்களாதேஷை இலங்கையணி பணித்ததற்கு இணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் சார்பாக முஹம்மத் அஷ்ரபுல் அதிகூடிய ஓட்டங்களாக 91 பந்து வீச்சுக்களில் 75 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் வேறு எந்தவொரு வீரரும் 50 ஓட்டங்களை பங்களாதேஷ் சார்பாக கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பங்களாதேஷ் அணி சார்பாக தனது முதலாவது ஒரு நாள் சர்வதேசப்போட்டியில் விளையாடிய ஷாபியுல் இஸ்லம் 5 ஓவர்கள் பந்து வீசி 39 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.

எனவே பதிலுக்கு 261 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கையணி 44 .5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கையணி சார்பாக TM டில்ஷான் 104 ஓட்டங்களையும், அணித் தலைவர் குமார் சங்கக்கார 74 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர். TM டில்ஷான் ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் பெற்ற 6 ஆவது சதம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் TM டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தத் தொடரின் முதலாவது போட்டி இவ்வாறு அமைய இரண்டாவது போட்டி மறு நாள் ஐந்தாம் திகதி இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் ஆரம்பித்தது. இந்தப் போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் களத் தடுப்பையே தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாட களம் புகுந்த இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பாக யுவராஜ்சிங் 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். வேறு எந்தவொரு வீரரும் இந்திய அணி சார்பாக 50 ஓட்டங்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் 280 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கையணி 48 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியீட்டியது. இலங்கையணி சார்பாக திலான் சமரவீர ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும், அணித் தலைவர் குமார் சங்கக்கார 60 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டார்கள். வேறு எந்தவொரு வீரர்களும் இலங்கையணி சார்பாக அரைச் சதம் கடக்கவில்லை. மேலும் இந்தப் போட்டியில் TM டில்ஷான் விளையாடவில்லை என்பதுடன் அவருக்கு பதிலாக லகிரு திரிமென்ன தனது ஒரு நாள் சர்வதேச அறிமுகப் போட்டியில் விளையாடியிருந்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உப்புல் தரங்கவுடன் களமிறங்கிய இவர் 24 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டப் பெறுதிகள் அடங்கலாக 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் திலான் சமரவீர தெரிவு செய்யப்பட்டார்.

உண்மையில் சச்சினைத் தவிர அத்தனை முழுமையான வீரர்களையும் கொண்ட இந்திய அணியுடன் TM டில்ஷான், சனத் ஜெயசூரிய, மஹேலஜெயவர்த்தன, முரளிதரன் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இலங்கையணி வெற்றி பெற்றமை முக்கியமான ஒரு விடயம் என்றே சொல்லவேண்டும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்திய மண்ணில் வைத்து இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்குமென்பதில் சந்தேகமில்லை.


இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி பங்களாதேஷ்-இந்திய அணிகளுக்கிடையில் கடந்த ஏழாம் திகதி இடம்பெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களம் புகுந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக இம்ருல் கயேஸ் 70 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 60 ஓட்டங்களையும், மஹ்முத்துல்லா ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும் அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.

அந்தவகையில் 297 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47 .3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி சார்பாக அணித் தலைவர் மகேந்திரசிங் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் முறையே ஆட்டமிழக்காமல் 101 , 51 ஓட்டங்களையும், விராட் கொஹ்லி 91 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.விராட் கொஹ்லிக்கு இது நான்க்காவது அரைச்சதம் என்பதுடன் மகேந்திரசிங் டோனிக்கு இது 7 ஆவது சதமும் ஆகும். நெருக்கடியான நிலையில் இந்திய அணி போராடி வெற்றி பெற்ற இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவு செய்யப்பட்டார்.

இங்கு பங்களாதேஷ் சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த இம்ருல் கயேஸ் மற்றும் தமிம் இக்பால் இருவரும் அரைச் சத்தங்களைக் கடந்திருந்தார்கள். அந்தவகையில் பங்களாதேஷ் சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த இரண்டு வீரர்களும் அரைச் சதம் கடந்தமை இதுவே முதற்தடவை என்பதுடன் பங்களாதேஷ் இந்தப்போட்டியில் பெற்றுக்கொண்ட 296 ஓட்டங்களே பங்களாதேஷ் அணியினால் டெஸ்ட் அந்தஸ்த்துள்ள ஒரு அணிக்கெதிராக ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக மூன்றாவது போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணி அடுத்த நாள் எட்டாம் திகதி அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இலங்கை அணியுடன் நான்க்காவது போட்டியில் விளையாடியது. அந்த வகையில் இந்தப் போட்டியிலும் இலங்கையணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைக்க களம் புகுந்த பங்களாதேஷ் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக இந்தப் போட்டியில் எந்தவொரு வீரரும் அரைச் சதம் கடக்காத நிலையில் அணித் தலைவர் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு 250 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கையணி 42 .5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அந்தவகையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியில் உப்புல் தரங்கவுடன் காயத்திலிருந்து மீண்டு போட்டிகளுக்கு திரும்பிய மஹேல ஜெயவர்த்தன ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இணைந்தார். இதில் உப்புல் தரங்க மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களையும், மஹேல 108 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். உப்புல் தரங்கவை பொறுத்தவரையில் இது அவரது எட்டாவது சதம் என்பதுடன், மஹேலவுக்கு இது 12 ஆவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் உப்புல் தரங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததன. அந்தவகையில் புஷ்பகுமார, வெலகெதர, சுரங்க லக்மல் போன்றோர் அணியிலிருந்து நீக்கப்பட்டதுடன் மஹேல ஜெயவர்த்தன, மலிங்க பண்டார, நுவான் குலசேகர ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டனர். மேலும் இதே அணியே இந்தியாவுடன் நாளைய தினம் நடைபெறவுள்ள போட்டியிலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக இலங்கை-இந்திய-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இலங்கையணி ஒவ்வொரு போட்டியிலும் தலா 4 புள்ளிகள் வீதம் பெற்று முன்னணியில் உள்ளதுடன் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 4புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி என்கின்ற நிலையில் புள்ளிகள் எதனையும் பெறாத நிலையில் உள்ளது.

உண்மையில் இந்தத் தொடரில் பங்களாதேஷின் துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தபோதிலும் பந்து வீச்சாளர்கள் பெரியளவில் பிரகாசிக்கத் தவறியமையே அந்த அணியின் தோல்விக்கான பிரதான காரணமாக உள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் பங்களாதேஷ் பெரும்பாலும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது என்றே தெரிகிறது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி எவ்வாறு அமையும் பொறுத்திருந்து பார்க்கலாம்???

Sunday, January 3, 2010

புதிய எழுத்துக்கள் வேண்டும்!!!


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்று சொல்வது கொஞ்சம் மிகையானது என்றாலும் தமிழர்களும், நமது தமிழ் மொழியும் நீண்ட வரலாறுகளைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் என்பதை யாருமே மறுத்துவிட முடியாது. அந்தவகையில் நமது மொழி முன்பிருந்த வடிவில்தான் இப்பொழுதும் உள்ளதா?? நமது மொழியின் எழுத்துக்கள் ஆரம்பத்திலிருந்தது போலவா இப்பொழுதும் உள்ளன?? என்று கேட்டால் எல்லோரும் இல்லை என்றே சொல்வோம். உண்மையும் அதுதான்.

அதாவது இயல்பான காலமாற்றங்களுக்கும், உலக ஒழுங்குகளுக்கும் அமைவாக நமது மொழியிலும் நாமது அறிஞர்கள், பண்டிதர்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள், இன்னும் உருவாக்கிவருகிறார்கள். அந்தவகையில் பெரும்பாலும் கலைச் சொல் உருவாக்கங்கள் நமது மொழியில் அதிகளவில் நிகழ்கின்றன.

ஆனாலும் னா,ணா,றா போன்ற எழுத்துக்களின் மாற்றங்களுக்கு பிறகு அண்மைக்காலத்தில் நமது தாய்மொழி எழுத்துக்களில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவில்லை. மேலும் தமிழ் மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கை 247 என்கின்ற அளவிலையே தொடர்ந்தும் பேணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் நாம் வடமொழியிலிருந்து கடன் வாங்கிவைத்திருக்கும் கிட்டத்தட்ட ஐந்து எழுத்துக்களை இன்னமும் திருப்பிக் கொடுக்காமல் வைத்திருக்கின்றோம்.

சொல்லப்போனால் நமது இளஞ் சந்ததி அவற்றையும் நமது தமிழ் எழுத்துக்கள் என்று கருதுகின்ற அளவுக்கு இப்போது குறிப்பிட்ட வடமொழி எழுத்துக்களின் ஆதிக்கம் நமது கட்டுரைகள், கவிதைகள், படைப்புக்களில் அதிகளவில் உள்ளன. அதாவது நாம் அவற்றை நமது அன்றாட வாழ்வில் அதிகளவில் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இந்த நிலையில் தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் நோக்கில் சில வட மொழி எழுத்துக்களை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக தமிழ் எழுத்துக்கள் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. (உதாரணம்-ஜனாதிபதி=சனாதிபதி.) இருப்பினும் குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரையோ அல்லது இடத்தையோ குறிப்பிடும்போது இவை சாத்தியமற்றவையாகிவிடுகின்றன. அந்தவகையில் முதலில் தமிழ்ச் சமூகத்தினராகிய நாம் முதலில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அதாவது நமது தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி வடமொழி எழுத்துக்களை நமது மொழிப் பயன்பாட்டிலிருந்து நீக்கி அவற்றுக்கு பதிலான புதிய தனித்துவமான தமிழ் எழுத்துக்களை உருவாக்க முன்வரவேண்டும்.

வடமொழி எழுத்துக்களுக்கான மாற்றீட்டு தனித்துவ தமிழ் எழுத்துக்களின் உருவாக்கத்துக்கான தேவை இவ்வாறு இருக்க, தமிழ் மொழியின் எழுத்துக்களில் இன்னும் புதிய மூன்று எழுத்துக்களுக்கான தேவை உள்ளது. அதாவது நாம் இன்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் பரந்துவிரிந்த உலகத்துக்குள், ஆங்கில மொழியின் அதிக ஆதிக்கப் பிடிக்குள் பிரவேசித்திருப்பதால் இந்த மூன்று புதிய எழுத்துக்களுக்கான தேவையும் தவிர்க்கமுடியாததாக உள்ளது.

அந்தவகையில் இன்று நம்மில் அதாவது நமது ஊடகத் துறைக்குள் BANKIMOON என்பதை பான்கிமூன் என்று உச்சரிக்கும் எத்தனையோ மூத்த, இளைய அறிவிப்பாளர்கள், தொகுப்பாளர்களை காணமுடிகின்றது. அதுமட்டுமல்லாமல் இடங்களின் பெயர்களை சொல்லும்போதும் இவ்வாறான பிரைச்சினைகளை அறிவிப்பாளர்களும், தொகுப்பாளர்களும் எதிர்கொள்வது என்னவோ உண்மைதான். உதாரணங்களாக BANDARAWALA என்பதை பண்டாரவளை என்றும், BERUWALA என்பதை பேருவளை என்றும், பண்டாரிக்குளம் என்பதை BANDAARIKKULAM என்றும், பண்டத்தரிப்பு என்பதை BANDATHTHARIPPU என்றும் உச்சரிக்கும் பலர் உள்ளனர்.

எனவே இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில்க் கொண்டு பெரும்பாலான ஊடகங்களில் இடங்கள், பெயர்கள் என்பன ஆங்கிலத்திலையே எழுதப்பட்டு வாசிக்கப்படுவதுண்டு.. ஆனாலும் அச்சுத் தமிழ் ஊடகங்களில் இவை சாத்தியமற்றவை. ஆகவே அச்சு ஊடகங்களை வாசிக்கும் தமிழர்கள் பிழையான உச்சரிப்பை பின்தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக தொடர்வதை அவதானிக்க முடிகின்றது.எனவே நாம் B உச்சரிப்புக்குரிய ஒரு புதிய தூய தனித்துவமான தமிழ் எழுத்தை உருவாக்கவேண்டியவர்களாக உள்ளோம்.

நமது முதலாவது புதிய தமிழ் எழுத்துக்கான தேவை இவ்வாறு இருக்க, அடுத்து நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு ஆங்கில எழுத்தான F உச்சரிப்பில் ஒரு புதிய தூய தமிழ் எழுத்தை தோற்றுவிக்க வேண்டியுள்ளது. இங்கு நாம் தற்போது F உச்சரிப்புக்காக "ஃ ப்" என்பதையே அதிகளவில் பயன்படுத்துகின்றோம். ஆனாலும் உச்சரிப்பு ரீதியில் அது முற்றிலும் முரணான ஒன்றாகவே உள்ளது. அதாவது இந்தப் பயன்பாடு காரணமாக "ஃ" என்பதன் உண்மையான உச்சரிப்பு சிதைக்கப்படுகின்றது.

எனவே மேற்படி F ஒலிக்கு அமைய ஒரு புதிய எழுத்து தமிழில் அவசியம். குறிப்பாக இலங்கை, தமிழ்நாடு வாழ் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகள் தங்கள் பெயர்களை தமிழில் எழுதுவதற்கு இந்த எழுத்து உருவாக்கம் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் பெயர்களையும், ஏனையவர்ல்களின் பெயர்களையும், இடங்களையும்(உதாரணம்-FRANCE =பிரான்ஸ்.) ஊடகங்களில் உச்சரிக்கவும், அச்சேற்றவும் F உச்சரிப்பில் ஒரு தூய தமிழ் எழுத்து வேண்டும்.

F உச்சரிப்பு இவ்வாறு இருக்க, அடுத்து நம்மிடம் இப்போது W என்கின்ற எழுத்தின் பயன்பாடும் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் WATS என்பதை நம்மவர்கள் வாற்று என்று அழைக்கின்றார்கள். உண்மையில் WATS என்பது ஒரு சர்வதேச அலகு மட்டுமல்லாமல் அது ஒரு விஞ்ஞானியின் பெயருமாகும். ஆகமொத்தம் நாம் வாற்று என்று அழைப்பதன் மூலம் ஒரு குறித்த நபரின் பெயரை பிழையாக உச்சரிக்கின்றோம்.

அண்மையில் நமது நாட்டில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் LASANTHA WIKKIRAMATHUNGA அவர்கள் கொல்லப்பட்டபோது அவரின் பெயரை நமது இலத்திரனியல் ஊடகங்கள் லசந்த விக்கிரமதுங்க என்று உச்சரித்துக் கொண்டிருந்தன. நமது மொழியில் நாம் உச்சரிப்பு பிழைகளை விடுகின்றபோது அது எவ்வளவு பிழையானதோ அதேபோன்றுதான் குறித்த நபரின் பெயரை பிழையாக உச்சரிப்பதும் பிழையானதாக இருக்கும்.ஆகவே இவற்றை எல்லாம் பார்க்கின்றபோது W என்கின்ற ஆங்கில எழுத்துக்கான உச்சரிப்பில் ஒரு தூய தமிழ் எழுத்தின் உருவாக்கமும் அவசியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் சொல்லலாம் அதாவது முன்பு சிங்கள மொழியில் B ,F உச்சரிப்புக்களுக்கான சிங்கள எழுத்துக்கள் இருக்கவில்லை. எனினும் பிற்பட்ட காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அறிஞர்கள் இரண்டு எழுத்துக்களுக்கும் நிகரான சிங்கள எழுத்துக்களை உருவாக்கியிருந்தார்கள்.

ஆகமொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப்பார்க்கின்றபோது நாம் நமது மொழிக்குள் ஊடுருவியிருக்கும் வடமொழி எழுத்துக்களுக்கு பொருத்தமான தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதுடன், புதிய மூன்று எழுத்துக்களையும் இப்போதைக்கு உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். இங்கு ஆங்கில மொழியின் ஆதிக்கத்துக்கு தமிழ் உட்படாது, அதனை பின்பற்றி புதிய தமிழ் எழுத்துக்களை உருவாக்குவது தமிழ் மொழியின் தனித் துவத்தை பாதிக்கும் போன்ற விடயங்கள் இருந்தாலும் நாம் இவ்வாறான மாற்றம் ஒன்றைச் செய்யாவிட்டால் நமது எழுத்துப் பயன்பாடுகளில் ஆங்கிலம் அதிகம் ஊடுருவும் என்பதையும் கவனத்தில்க் கொள்ளவேண்டும்.

Saturday, January 2, 2010

ஜனாதிபதித் தேர்தல்!!!! பிச்சை வேண்டாம் நாயைப் பிடி!!!!

இலங்கையில் புதிய ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புடனும், மலையாக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மரணத்துடனும் பிறந்திருக்கிறது. ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு கூட இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு தமிழ் அரசியல்வாதியான காலஞ் சென்ற மகேஸ்வரனின் மரணத்துடன்தான் ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டிலும் ஒரு அரசியல்வாதியின் மரணத்துடன் மலர்ந்திருக்கும் புத்தாண்டு என்ன என்ன நன்மைகளை, தீமைகளை கொண்டுவரும் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் மீது மக்களின் கவனம் அதிகமாக குவிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல சர்வதேச நாடுகளினது பார்வையும் கூட இந்தத் தேர்தலின் மீதுதான் உள்ளது.

இந்த நிலையில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்கின்ற எந்தவொரு உறுதியான தகவலையும் வெளியிட முடியாத நிலையில் அரசியல் ஆய்வாளர்கள் உள்ளார்கள். அதுமட்டுமல்லாது இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அறிந்துகொள்ள புலம்பெயர் வாழ் தமிழர்களும், இலங்கை வாழ் தமிழர்களும் ஆவலாக உள்ளார்கள்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரையில் அவர்கள் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அது அவர்களுக்கு தற்போது உள்ள பலத்தில் அதாவது மக்கள் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்ற நிலை உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் செல்வாக்கை தக்க வைக்க வேண்டும் என்பதுடன் தமது கட்சி உறுப்பினர்களையும் பிரிந்து செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்கின்ற நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் உள்ளார்கள்..

இந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையிலும், அதில் அங்கம் வகிக்கும் கட்சியினர்களுக்கு மத்தியிலும் சின்னச்ச் சின்ன பிரைச்சினைகள், கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் அவை பூதாகரமாகியிருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்படாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட முடிவு செய்தமை, அவருக்கு இன்னுமொரு சக பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீகாந்தா ஆதரவு வழங்கிவருகின்றமை என்பவற்றை இதற்கான உதாரணங்களாக சொல்ல முடியும். மேலும் அண்மையில் நடைபெற்ற தமித் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழ் காங்கிரசின் கூட்டத்தில் அக்கட்சி தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜானதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை கட்சி, கொள்கை என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் வரவேற்கலாம். இதே போன்றதொரு கருத்தைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தனும் அண்மையில் வெளியிட்டிருந்தார். மேலும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு பிரதான வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஜானாதிபதித் தேர்தலில் எந்தவொரு பிரதான வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளை பெற்றுக் கொள்ளாமல் தடுப்பதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆகமொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கும்போது கிட்டத் தட்ட அதன் பலம் பாதியாக குறைந்துபோய்விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும் அண்மையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொடர்பில் வெளியிட்ட கருத்து புலம் பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஆகவே எல்லா நிலைமைகளையும் கவனத்தில்க் கொண்டு கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் என்ன முடிவை எடுப்பார்?? ஏற்கனவே சொன்னது போல எதிர்வரும் நான்காம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு வெளிவருமா?? பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் இவ்வாறு இருக்க ஜானாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் யுத்த வெற்றியின் பிரதான பங்கு தமக்கே என்று சொல்வதிலும், ஒருவரின் முகத்தில் இன்னொருவர் கரி பூசுவதான கருத்துக்களை வெளியிடுவதுமாக தேர்தல் பிரசாரங்களிலும், ஊடக அறிக்கைகளிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் மக்களுக்கான சலுகைகள் தொடர்பாகவும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். விரைவில் தேர்தல் விஞ்ஞாபனமும் முன்வைக்கப்படவுள்ளது.

இன்றைய நிலையில் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை கருத்தில்க்கொண்டு பொருட்களின் விலைகளைக் குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கையின் அதியுயர் துறையான நீதித் துறையால் அதாவது நீதிமன்றத்தால் பெற்றோலின் விலை குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட போது அதனை கவனத்திலெடுக்காத அரசாங்கம் அண்மையில் பெற்றோலின் விலையை 15 ரூபாவினால் குறைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லாப் எரிவாயுவும் கணிசமான அளவு விலைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கின்றது.மேலும் இடம்பெயர் மக்களினதும், யாழ்ப்பாண மக்களினதும், கிழக்கு மாகாண மக்களினதும் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் மீள்குடியேற்றம், கட்டுபாடற்ற போக்குவரத்து, அனுமதியின்றிய மீன்பிடித் தொழில், புதிய போக்குவரத்து ரயில்பஸ் சேவைகள் என்பனவும் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இடம்பெயர் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை என்று தேர்தல் செயலகம் அறிவித்திருக்கின்றது. ஏற்கனவே பல்வேறு அமைப்புக்கள் இதனை சொன்னபோது அதனை மறுத்து தேர்தலுக்கான பதிவுகள் இடம்பெயர் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சொன்ன தேர்தல் செயலகம், இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இடம்பெயர் வாக்காளர்களில் இதுவரை
23000 வரையிலான வாக்காளர்களே தங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், இடம்பெயர் வாக்காளர்கள் தேதர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லியுள்ளது.

இடம்பெயர் மக்கள் இறுதிவரை இதே நிலைப்பாட்டிலையே இருப்பார்களானால் அரசாங்கம் மிக வேகமாக இடம் பெயர் மக்களுக்கு செய்து வரும் சலுகைகளெல்லாம் வீணாகிவிடும். அதாவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தகர்ந்துபோயவிடும். மேலும் இடம்பெயர் மக்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆர்வங்காட்டாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு வெளிவராமையும் ஒரு காரணமாக இருக்கலாம். உண்மையில் இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலோ விரைவாக வராவிட்டால் இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இவ்வாறாக அரசாங்கம் சார்பிலான ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் இருக்க எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா யுத்த கால உண்மைகளை ஊடகங்களுக்கு சொல்வதாகவும், அரசாங்கம் செய்கின்ற பிழைகளை சுட்டிக்காட்டுவதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவும் தனது அரசியல் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் ஒரு காலத்தில் தமிழர்கள் இந்த நாட்டின் வந்தேறுகுடிகள் என்று சொன்ன ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது இடம்பெயர் மக்கள் பாதுகாப்பற்ற வகையில் மீள்குடி ஏற்றப்படுவதாகவும், அவர்களுக்கு போதியளவு வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் கண்ணீர் வடிக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல் அண்மைக்காலமாக அவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கின்றார். அதாவது ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் கருத்துக்களாலும், அவர் தொடர்பில் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களாலும் பல சர்ச்சைகள், குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அண்மையில் முன்னாள் கடற்படைத் தளபதி தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகம் ஒன்றில் வெளியிட்ட கருத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறி முன்னாள் கடற்படைத் தளபதி ஜெனரலிடம் நஷ்ட ஈடு கோரியிருப்பதை குறிப்பிட்டு சொல்லமுடியும். இவ்வாறாக ஆரம்பமே சர்ச்சைகள், குழப்பங்கள் என தனது அரசியல் வாழ்வில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கியதேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என இரண்டு பெரும்பான்மை இனக் கட்சிகள் ஆதரவாக உள்ளமை பலம் என்றே சொல்ல வேண்டும்.

இங்கு இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆசிய நாடுகளில்ன் குறிப்பாக இந்தியாவின் செல்லப் பிள்ளையாகவும், ஜெனரல் சரத் பொன்சேகா மேற்குலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் வலம் வருகிறார்கள் என்றே தெரிகிறது. இந்த இடத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவினால் மூளைச் சலவை செய்யப்பட்டே ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதையும் நினைவுபடுத்தலாம்.

நிலைமை இவ்வாறு இருக்க ஜெனரல் சரத் பொன்சேகா உண்மையில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்தால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை இந்தியாவின் கைகளிலிருந்து அமெரிக்காவின் கைகளுக்கு இடம்மாற வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையிலான புரிந்துணர்வு, ராஜதந்திர உறவு என்பவற்றின் அடிப்படையில் இந்தக் கைமாற்றத்தை குறுகிய காலத்திற்குள் எதிர்பார்க்க முடியாது.
இந்த இடத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் சின்ன சின்ன விரிசல்கள் கைமாற்றத்துக்கு வித்திடலாம். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் பார்வையும் ஆசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு அடிப்படையாக அமையலாம். மேலும் இந்தியாவில் இப்போதுள்ள தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பிலான குழப்பங்களும், தீவிரவாத அச்சுறுத்தல்களும் இந்தியா இலங்கையின் மீது வைத்திருக்கும் ஆதிக்கங்களை குறைத்து உள்நாட்டுக்குள் கவனத்தை திருப்ப வாய்ப்பாக அமையக்கூடும். இவ்வாறு இந்தியாவின் ஆதிக்கம் குறையும்போது அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை புதிய பாதையில் பாணிப்பதற்குரிய சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லலாம்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முன்னெடுப்புக்களும் அதன் விளைவுகளும் இவ்வாறு இருக்க மலையாக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மரணத்தால் மலையாக மக்கள் முன்னணியின் எதிர்காலம் தொடர்பான கேள்விகள் இப்போதே எழுந்திருக்கின்றன.அதாவது மலையாக மக்கள் முன்னணியின் அடுத்த தலைவராக பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மறைந்த மலையாக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் மனைவி சந்திராதேவி சந்திரசேகரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.ஆனாலும் அவரின் தலைமையில் அனைவரும் ஒன்றுபட்டு மலையாக மக்கள் முன்னணி கட்டுக்கோப்புடன் இருக்குமா?? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் சந்திரசேகரனின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு புதிதாக யாரை நியமிப்பது என்பது தொடர்பிலும் மலையாக மக்கள் முன்னணி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது.

மலையாக மக்கள் முன்னணியின் நிலை இவ்வாறு இருக்க மலையகத்தின் மற்றுமொரு பிரதான அரசியல்க் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பலவீனமடைந்திருக்கிறது.. அதாவது அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களான கட்சியின் தேசிய அமைப்பாளர் R .ஜோகராஜனும், பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான M .சச்சிதானந்தனும் கட்சியிலிருந்து விலகிச் சென்று ஐக்கியதேசியக் கட்சியில் இணைந்துள்ளார்கள். இதனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இந்தக் கட்சித் தாவலால் அரசாங்கமும் பாதிப்படந்திருக்கின்றது. மேலும் எதிரணிக்கு இது மேலும் பலம் சேர்க்கும் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவு உள்ள நிலையில் மலையாக வாக்காளர்களை கவருவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பிளவு எதிரணிக்கு வலுச் சேர்த்திருக்கின்றது.

உண்மையில் மலையாக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் மரணமும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பிளவும் அந்தந்தக் கட்சிகளின் பலவீனம் என்பதுமட்டுமல்லாமல் அவை மலையாக மக்களுக்கும் நிறைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.. ஏற்கனவே மலையகத்தில் புதிய புதிய கட்சிகளின் தோற்றங்களால் வாக்குகள் சிதறடிக்கப்பட்ட நிலையில் இனிவருங் காலங்களில் இன்னும் இன்னும் மலையாக சமூகம் அரசியல் ரீதியில் பலவீனமடைய மேற்படி சம்பவங்கள் இரண்டும் வழிவகுத்திருக்கின்றன.

இவ்வாறாக ஒரு புதிய தசாப்தத்துக்குள், புதிய ஆண்டு ஒன்றில் இலங்கையின் அரசியல் நகரப்போகின்றது. பெரும்பாலும் இலங்கையின் அரசியல் போக்கில் நிகழப்போகும் மாற்றங்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலே தீர்மானிக்கப்போகின்றது. ஆனாலும் தமிழ் பேசும் சமூகத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு தேர்தலும் எந்தவொரு பெரியளவு மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை. தமிழ் பேசும் சமூகம் எத்தனையோ தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டவர்கள். எத்தனையோ ஒப்பந்தக்களைக் கண்டவர்கள்.

ஒரு விடயத்தை சிந்தித்தால் தேர்தலில் வாக்களிக்காமலே இருதுவிடலாம் போல தோன்றுகிறது. அதாவது வட கிழக்கில் ஒருகுறிப்பிட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்து அவர் ஜனாதிபதியாக தெரிவாகாமல் மற்றவர் தெரிவு செய்யப்பட்டால் நமது நிலை??? பிச்சை வேண்டாம் நாயைப் பிடி!!!!