உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, September 18, 2010

பலே பாகிஸ்தான்..........

அலுவலகத்தில் வேலைகள் குறைவுதான் ஆனாலும் வலைப் பதிவு இடுவதற்கு நேரமில்லாத அளவுக்கு இதர வேலைகள் இருந்தமையால் கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பிறகு பதிவுகள் எதனையும் வழங்க முடியவில்லை.. இன்று இந்தப் பதிவை எழுதினாலும் தொடர்ந்து பதிவுகளை எழுத முடியுமா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கின்றது.. முடியுமானவரை இனி என் பதிவுகள் ஒழுங்காக வரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றேன்...

நம்மைப் போன்ற விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்த நாட்கள் உற்சாகமானவை. காரணம் ஒருபக்கம் சம்பியன் லீக் போட்டிகள் இன்னுமொருபக்கம் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் என்று விளையாட்டு உலகம் பரபரப்பாக இருக்கின்றது...

அந்த வகையில் கடந்த பத்தாம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பித்த பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. அடுத்து 12 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணிதான் வெற்றி பெற்றிருந்தது.இதில் இங்கிலாந்து அணி 3 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 4 இலக்குகளினால் வெற்றியீட்டியது. இந்த நிலையில் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தானும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விட முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து அணியும் நேற்றைய 3 ஆவது போட்டியில் மோதிக் கொண்டன.




இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தனர். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49 .4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பாகிஸ்தான் அணி சார்பாக ஃபவேட் அலம் அதிக பட்சமாக 86 பந்துவீச்சுகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டப் பெறுதிகள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் வேறு எந்தவொரு பாகிஸ்தான் அணி வீரர்களும் அரைச்சதம் பெறவில்லை. அஷாத் சபீக் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக அன்டர்சன் 10 ஓவர்கள் பந்து வீசி இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 26 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும், டிம் ப்ரெஸ்ணன் 9 .4 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 51 ஓட்டங்ககளைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும் பதம் பார்த்தனர்.

இதன் படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 242 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் புகுந்த இங்கிலாந்து அணியினர் 45 .4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இந்தப் போட்டியில் தோல்வியடைந்தனர். உண்மையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் மோர்கன் (64 ), அன்று ஸ்ட்ரவுஸ் (57 ) ஆகியோர் அரைச்சதம் கடந்த போதிலும் ஏனைய வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காமையால் இங்கிலாந்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் இங்கிலாந்து சார்பாக ரைட் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது..




இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக உமர் குல் மிகவும் சிறப்பான பந்து வீச்சுப் பெறுதியை வெளிப்படுத்தியிருந்தார். 10 ஓவர்கள் பந்து வீசிய இவர் 42 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து 6 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். மேலும் அப்துல் ரசாக் 7 .4 ஓவர்கள் பந்து வீசி 38 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.மேலும் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக செயற்பட்ட உமர் குலத்தான் இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.



உண்மையில் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெறுவதற்கு உமர் குல்லின் பந்து வீச்சுத்தான் காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாக இருக்காது.



அந்த வகையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தொடரை கைப்பற்றும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்க வைத்துக் கொண்டது என்பதுடன் அடுத்து வருகின்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும் பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதியும் ஐந்தாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க தென்னாபிரிக்காவில் நடை பெற்று வருகின்ற சம்பியன் லீக் இருபத்துக்கு-இருபது போட்டிகளில் நேற்றைய தினம் பங்களூர் ரோயல் மற்றும் தென் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 9 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்ற நிலையில் இன்று சென்றல் டிஸ்ட்ரிக்-வார்ரியார்ஸ் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-விக்டோரியா அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது. இவை முறையே இந்த சம்பியன் லீக் போட்டிகளின் 12 ஆவது, 13 ஆவது போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 7, 2010

கிரிக்கட்....கிரிக்கட்.....கிரிக்கட்.....

இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின்போது தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ள இந்திய அணி இலக்கு இழப்பின்றி 25 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்தவகையில் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதலாவது இனிங்ஸில் 6 இலக்குகளை இழந்து மொத்தமாக 558 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தி இந்திய அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தது.

அந்தவகையில் தென்னாபிரிக்க அணி சார்பாக முதலாவது இனிங்ஸில் மிகவும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஹசிம் அம்லா 473 பந்து வீச்சுக்களில் 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இது ஹசிம் அம்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கட்டில் பெறும் முதலாவது இரட்டைச் சதமாகும். இதற்கு முன்னர் நியுசிலாந்திற்கு எதிராக கடந்த 2007 நவம்பரில் பெற்ற 176 ஓட்டங்களே ஹசிம் அம்லாவின் அதிகூடிய சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் ஓட்டமாக அமைந்திருந்தது.
ஹசிம் அம்லாவின் அதிரடிக்கு துணையாக தென்னாபிரிக்க அணியின் மற்றுமொரு வீரரான ஜக் கலிசும் தன பங்கிற்கு அசத்தியிருந்தார். அந்தவகையில் மொத்தமாக 351 பந்துவீச்சுக்களை எதிர்கொண்ட ஜக் கலிஸ் 15 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக மொத்தமாக 173 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஜக் கலிஸ் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் அரங்கில் பெறும் 34 ஆவது சதம் இதுவாகும்.ஹசிம் அம்லா, ஜக் கலிஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்க அணி சார்பாக AB டிவிலியஸ் 88 பந்துவீச்சுக்களில் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றார். இது டிவிலியசின் 21 ஆவது அரைச் சதமாகும்.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் இவ்வாறு அமைய இந்திய அணி சார்பாக சஹீர்கான் 31ஓவர்கள் பந்து வீசி 7 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 96 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தியதுடன் ஹர்பஜன்சிங் 46 ஓவர்கள் பந்து வீசி 1 ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 166 ஓட்டங்களைக் கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். மேலும் வீரேந்திர ஷேவாக் 1 இலக்கை வீழ்த்தினார். அமித் மிஷ்ரா இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக முதலாவது இனிங்க்சில் அதிகூடிய ஓவர்கள் (53 ) பந்துவீசியபோதிலும் ஒரு இலக்கைத்தானும் வீழ்த்தவில்லை.

இவ்வாறாக தென்னாபிரிக்க அணியின் முதலாவது இனிங்ஸ் நிறைவடைய தன்னுடைய முதலாவது இனிங்சை ஆரம்பித்த இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது இலக்கு இழப்பின்றி 4 ஓவர்கள் நிறைவின் போது 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்தவகையில் இந்திய அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த கம்பீர் 12 ஓட்டங்களையும், வீரேந்திர ஷேவாக் 9 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் களத்திலிருந்தார்கள்.

இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நிலைவரம் இவ்வாறு இருக்க இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகள்- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேசப் போட்டித்தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் மெல்பேர்னில் நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களம் புகுந்த அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வொட்ஷன் 74 பந்துவீச்சுக்களை எதிர் கொண்டு 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். வொட்ஷன் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெறும் 12 ஆவது அரைச் சதம் இதுவாகும். இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ரிக்கிப் பொண்டிங் ஒரு ஓட்டத்தால் அரைச்சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பொல்லர்ட் 10 ஓவர்கள் முழுமையாக பந்துவீசி 45 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும், ரவீந்திரநாத் ராம்பவுல் 8 ஓவர்கள் பந்துவீசி 43 ஓட்டங்களைக் கொடுத்து 2 இலக்குகளையும் கைப்பற்றியிருந்தார்கள். மேலும் ஜமால் ரொயச், கெயில் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தியிருந்தார்கள்.

அந்தவகையில் 50 ஓவர்களில் 257 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 34 .2 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக பந்துவீச்சில் கலக்கிய பொல்லர்ட் 35 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 31 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்தவொரு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரரும் 30 ஓட்டங்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா சார்பில் ஜேம்ஸ் ஹர்ரிஸ் 9 ஓவர்கள் பந்து வீசி 1 ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 24 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும், ஹயுரிட்ஸ் 6 .2 ஓவர்கள் பந்து வீசி 28 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார்கள். மேலும் பொலிங்கர் 2 இலக்குகளையும் ஜோன்ஷன், வொட்ஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார்கள்.

அவுஸ்திரேலிய அணி 113 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பந்து வீச்சிலும் ஒரு இலக்கை வீழ்த்திய வொட்ஷன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி அடிலைட்டில் இடம்பெறவுள்ளது.

*************
நேற்றைய எனது பதிவில் பாகிஸ்தான் அணியின் சைட் அஃப்ரிடி பந்தக் கடித்த விவகாரத்தில் ஒரு விடயத்தை தவறவிட்டுவிட்டேன் அதாவது அஃப் ரிடியின் இந்தச் செயலுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான இன்சமாம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் அணித் தலைவர் பதவியைப் பறிகொடுக்கும் நிலையில் உள்ள பாகிஸ்தான் அணித்தலைவர் முஹம்மத் யூசுஃப்பிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

***********
இன்னுமொரு விடயம், பங்களாதேஷ்- நியுசிலாந்து அணிகளிற்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை டுனேடினில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதலாவது போட்டியில் தோல்வியடைந்த பங்களாதேஷ் இந்தப் போட்டியில் வென்றால்தான் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்கின்ற நிலையிலும், ஏற்கனவே முதலாவது போட்டியில் வென்ற நியுசிலாந்து நாளைய போட்டியில் வென்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்கின்ற நிலையிலும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

Saturday, February 6, 2010

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.!!!!

ஒரு பக்கம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், இன்னுமொரு பக்கம் ஐ.பி.எல் பரபரப்பு, பாகிஸ்தான் அவிஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடை பெற்ற போட்டிகள் பற்றிய சந்தேகங்கள், வினோத நிகழ்வுகள் என்று அரசியல் உலகைப் போலவே விளையாட்டு உலகமும் களைகட்டிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரும் விளையாட்டுப் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் இலக்குடன் தென்னாபிரிக்க அணியும் தற்போதுள்ள முதலிட அந்தஸ்த்தை தக்க வைக்கும் கட்டாயத்தில் இந்திய அணியும் மோதுகின்றமை போட்டியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.

அத்துடன் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியும் இன்னுமொரு பலம் பொருந்திய அணியான இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்த நிலையில் தென்னாபிரிக்க அணியும் மோதுகின்றமையும் கவனத்திலெடுக்கத்தக்கது.தென்னாபிரிக்க அணியைப் பொறுத்தவரையில் அதன் பயிற்சியாளர் ஆர்தர் பதவி விலகிய நிலையிலும், தெரிவுக் குழு கலைக்கப்பட்ட நிலையிலும் இந்திய அணியை எதிர்கொள்கின்றது.

அந்தவகையில் இன்று நாக்பூர் மைதானத்தில் ஆரம்பித்த இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல்நாள் ஆட்ட நிறைவின் போது இரண்டு இலக்குகளை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அந்த வகையில் ஹசிம் அம்லா ( 115 ) , ஜக் கலிஸ் (159 ) ஆகியோர் ஆட்டமிழக்காமல் சதம் கடந்த நிலையில் களத்திலுள்ளார்கள்.


இன்றையதினம் வீழ்த்தப்பட்ட இரண்டு இலக்குகளும் சஹீர்கானால் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது தென்னாபிரிக்க அணி மிகவும் வலுவான ஒரு நிலையை எட்டியுள்ளது.

இந்திய- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் இவ்வாறு இருக்க நடைபெற்று முடிந்த பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 0 -3 எனப் பறிகொடுத்ததுடன், ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 0 -5 எனப் பறிகொடுத்த பாகிஸ்தான் இறுதியாக வெற்றிகொள்ளும் என்று எதிர்பார்த்த 20 -20 சர்வதேசப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது.



இந்தத் தோல்விகள் குறித்த சந்தேகங்கள், கேள்விகள் பல தொடர்ந்து எழுந்தவண்ணமுள்ளன. இதன் விளைவாக பாகிஸ்தான் அணிக்கு இனி ஒருபோதும் பயிற்சியளிக்கமாட்டேன் என்று அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான வக்கார் யூனிஸ் சொல்லியுள்ளார். மேலும் தோல்விக்கு கிரிக்கெட் அல்லாத காரணங்கள் இருபதாகக் கூறும் வக்கார் யூனிஸ் இது குறித்து முறையான விசாரணை தேவை என்று கூறியதோடு, இந்த உண்மைகளை விளையாட்டுத்துறை நாடாளுமன்றக் குழுவிடம் மட்டுமே வெளிப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்..
இந்த உண்மைகளை கமிட்டி முன்னால் கூறினால்தான் நடந்தது பற்றி பொதுமக்களுக்கு தெரியவரும்மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவரும் என்று அவர் சொல்லியுள்ளார்..

இது ஒரு புறமிருக்க பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சைட் அஃப்ரிடி பந்தைக் கடித்த விவகாரம், மற்றும் ரசிகர் ஒருவர் ஆடுகளத்துக்குள் புகுந்து களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கலீத் லத்தீவை கட்டிப் பிடித்து தள்ளிய விவகாரம் என்பவற்றின் பரபரப்பு இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை.



அந்தவகையில் அஃப்ரிடி தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டபோதிலும் பாகிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர்கள் இருவரும், அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் ஒருவரும் அஃப்ரிடிக்கு ஆதரவாக எல்லா பந்துவீச்சாளர்களும் பந்தை சேதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்கள். மேலும் ரசிகர் ஆடுகளத்துக்குள் புகுந்த விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபையிடம் அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை மன்னிப்புக் கோரியிருக்கிறது.

பரபரப்பான இந்த விடயங்கள் ஒரு புறமிருக்க ஐ.பி.எல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படாமை குறித்து பாகிஸ்தானிய வீரர்கள் தங்கள் அதிர்ப்தியை அண்மையில் வெளியிட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சில பாகிஸ்தானிய வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டிகளில் வாய்ப்பிருப்பதாக ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் லலித்மோடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் பங்குபற்றுவதை இந்தியாவில் பால்தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடுமையாக எதிர்த்து வருகின்றது.

இதன்காரணமாக அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகக் கூடுமென செய்திகள் வெளிவந்திருந்தாலும் தற்போது சில பாதுகாப்பு அறிவுறுத்தல்களின் அடிப்படையிலும், தற்போது தென்னாபிரிக்கா இந்திய மண்ணில் விளையாடிவருவதன் அடிப்படையிலும் மேற்படி இரு நாடுகளின் வீரர்களும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபற்றுவார்கள் என்றே தெரிகின்றது.

மேலும் கொல்கத்தா நைட் ரேடர்ஸ் பாகிஸ்தான் வீரர்களை ஏலம் எடுத்தால் கொல்கத்தா நைட் ரேடர்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான ஷாருக்கானின் ""மை நேம் இஸ் கான்"" என்ற திரைப்படத்தை புறக்கணிக்கப்போவதாகவும் சிவசேனா எச்சரித்துள்ளது. இருப்பினும் இந்த எச்சரிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை என்று ஷாருக்கான் தரப்பிளிரிந்து பதில் வந்திருக்கின்றது.


இவ்வாறாக அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஐ.பி.எல் போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் ஒரு டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் ரசிகர்களை ஈர்க்க இருபது ஓவர் கிரிக்கெட்டை பயன்படுத்துங்கள், அதனை அதிகமாக பயன்படுத்தி ஓவர் டோஸ் கொடுக்காதீர்கள் என்று இருபது ஓவர் கிரிக்கெட்டை கண்டுபிடித்த ஸ்டூவர்ட் ராபர்ட்சன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஆக மொத்தம் அஃப்ரிடியின் மன்னிப்பு, அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையின் மன்னிப்பு, ஸ்டூவர்ட் ராபர்ட்சனின் இந்தக் கருத்து எல்லாமே கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமோ என்று எண்ணத் தோன்றுகின்றது...

Saturday, January 30, 2010

ஜனாதிபதித் தேர்தல்!!!! முடிவுகள் சொல்லும் செய்திகள்...

உள்நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகளாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்து ஆறாவது ஜனாதிபதியாக ஆளும் கட்சியின் பிரதான வேட்பாளராகக் களம் புகுந்த மகிந்தராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். உண்மையில் இந்தத் தேர்தலில் பெரும்பாலான ஆய்வுகள் கருத்துக் கணிப்புக்கள் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவே அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்வுகூறியிருந்தன. இன்னும் சில ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுகளில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றும் சில வேளைகளில் இருவருமே ஐம்பது வீத வாக்குக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் அனைத்து கருத்துக் கணிப்புக்களையும் எதிர்வு கூறல்களையும் பொய்யாக்கி கிட்டத்தட்ட பத்தொன்பது இலட்ச வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கும்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இந்த ஜனாதிபதித் தேர்தலில் பதின்நான்கு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலை வகித்ததாகவும் ஆனால் ஆளும் கட்சியின் அழுத்தத்தின் பிரகாரம் தேர்தல் திணைக்களம் தனது வெற்றியை அரசாங்கத்தின் வெற்றியாக அறிவித்ததாகவும் சொல்லியுள்ளார். இதுதொடர்பில் ஐக்கியதேசியக் கட்சி நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இணைய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் இவ்வாறான குற்றச்ச்சாட்டுக்களை முன்வைக்கின்றபோதிலும் இவற்றை நிரூபிக்கக் கூடிய வகையில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை, மேலும் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட அமைப்புக்கள் இந்தத் தேர்தல் நீதியான முறையில் நடைபெற்றதாக சொல்லியுள்ளமையையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்தவரும், இன்னுமொரு வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் எதிர் முனைகளில் போட்டியிட்டமை இதுவே முதற்தடவையாகும் என்பதுடன் சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் முன்னின்ற இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலை. இவ்வாறன ஒரு சூழலில் இலங்கையில் உள்ள இருபத்தியிரண்டு தேர்தல் மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாகவுள்ள ஆறு மாவட்டங்களில் மாத்திரமே எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். ஏனைய பதினாறு மாவட்டங்களிலும் சிங்கள மக்கள் தங்கள் தலைவராக மீண்டும் மகிந்தராஜபக்ஷவையே தெரிவு செய்துள்ளார்கள்.

உண்மையில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குறிப்பாக வடகிழக்கில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றமைக்கு இரண்டு விடயங்களை காரணங்களாக சொல்ல முடியும். ஒன்று தமிழ் சமூகம் தற்போதைய ஆளும் கட்சி ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் திருப்தி கொள்ளாமல் மாற்றம் ஒன்றை விரும்பியிருக்கலாம், அல்லது தமது தேசியக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட்டு சரத் பொன்சேகாவிற்கு மக்கள் வாக்களித்திருக்கலாம்.

எது எப்படியோ கடந்த பாராளுமன்றத்தில் தமது தேசியக் கட்சியான தமித் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்த தமிழ் சமூகம் நிச்சயமாக இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வழிநடத்தப்பட்டதாகவே தெரிகின்றது. இங்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியில் இருக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசுக்கு அதாவது ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தபோதிலும் கிழக்கு மாகான மக்கள் பொன்சேகாவிற்கு வாக்களித்துள்ளார்கள் என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள செல்வாக்கை மீண்டுமொரு முறை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் அண்மைக்காலமாக யாழ் மக்களின் அபிவிருத்தி, வட மாகாண மக்களின் நலன் என்று சொல்லி அரசியலில் பயணித்த அரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு இருந்தும் தமிழ் சமூகம் தமித் தேசியக் கூட்டமைப்பின் தெரிவான சரத் பொன்சேகாவை ஆதரித்திருப்பதன் மூலம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலின் நீதி, நேர்மை தொடர்பில் வலுவான சந்தேகம் எழுகின்றது.

இங்கு ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட கிழக்கில் அமோக வெற்றியீட்டி 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போது தேர்தல் மோசடி, புலிகளின் வன்முறை, நீதியற்ற தேர்தல் போன்ற காரணங்களைச் சொன்ன வடகிழக்கை சேர்ந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ் கட்சிகளினால் இந்தத் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததாக கூறமுடியாத நிலை. அதாவது ஜனாதபதியாக மகிந்த வெற்றி பெற்றுள்ளமையால் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததாகக் கூற முடியாத நிலைக்கு மேற்படி கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

இப்படியான ஒரு சூழலில்தான் அரசாங்க அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து பின்னர் இன்றைய தினம் காலையில் அந்த முடிவை மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக சொல்லியுள்ளார்.
இவ்வாறான விடயங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற போது இலங்கையில் அடுத்துவருகின்ற பொதுத் தேர்தலில் இந்தத் தமிழ்க் கட்சிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் ஓரளவுக்கு ஊகிக்க முடிகின்றது..

உண்மையில் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் இப்போது அவர்களிடம் போதுமான அரசியல் அடிப்படைத் தெளிவு இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். தமிழர்கள் வன்னி இறுதி யுத்தத்தில் முன்னின்ற சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா??, தமிழ் வேட்பாளர் ஒருவருக்கே வாக்களிப்போம் என்று சிந்தித்து சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து வாக்குகளை சிதறடிக்காமை இதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் தமிழ் சமூகம் இனவாத சமூகம் அல்ல என்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஆனால் சிங்கள சமூகம் தமது இனவாத கட்டமைப்புக்குள் இருந்து இன்னமும் வெளிவராதவர்களாகவே உள்ளார்கள். இந்தத் தேர்தலில் இடது சாரிக் கொள்கைகொண்ட விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு சிங்கள மக்களிடம் கிடைத்திருக்கும் மிகக் குறைந்தளவு வாக்குகள் இதனை எடுத்துகாட்டுவதாக உள்ளன. அத்துடன் சரத் பொன்சேகா இந்தத் தேர்தலில் சிங்கள மக்கள் அதிகம் வாழும் தேர்தல் மாவட்டங்களில் தோல்வியடையக் காரணமாக இருந்தமையும் அவர் இனவாதம் பேசியது சிங்கள மக்களுக்கு திருப்தியளிக்காமைதான்.

அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சரத்பொன்சேகாவுக்கு கிடைத்தததும் சிங்கள சமூகத்திடம் அவர் தோல்வியடையக் காராணமாக இருந்ததையும் மறுக்கமுடியாது. அதாவது சிங்களவர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடத்தில் சரத் பொன்சேகாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உடன்பாடுகள் தொடர்பில் பிழையான கற்பிதமளிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றியும் சிங்கள அரசியல் கட்சிகள் தவறான ஒரு கண்ணோட்டத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன.

எனவே இவ்வாறான ஒரு பின்னணியில் சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஏற்க மறுத்துள்ளார்கள். சிங்கள மக்களிடத்தில் இனவாதம் எவ்வளவுக்கு வளர்க்கப்பட்டுள்ளது என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறான நிலைமை காலங் காலமாக தொடர்கின்ற ஒன்றுதான். அதாவது தமிழர் தரப்புடன் நெருங்கி வருகின்ற கட்சிகளை அதற்கு போட்டியாக உள்ள கட்சியின் பிரசாரங்களால் சிங்கள மக்கள் நிராகரிப்பது காலங்காலமாக தொடர்வதுதான். கடந்த ஐக்கிய தேசியின் ஆட்சி 2004 ஆம் ஆண்டில் பறிபோனதும் இதனால்தான்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ஒரு போதுமே அரசியல் ரீதியில் ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை எந்தவொரு ஆட்சிக்கு வருகின்ற கட்சியாலும் முன்வைத்து நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மையாகும்.இந்த நிலையில்தான் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மகிந்தராஜபக்ஷ அடுத்த பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறும் தமிழ் அரசியல் கட்சியுடன் இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதாக சொல்லியுள்ளார். இப்போது பாராளுமன்றத்தில் அதிக ஆசனத்துடன் இருக்கும் தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மேலும் தமித் தேசியக் கூட்டமைப்புக்கு வடகிழக்கில் உள்ள செல்வாக்கை ஜனாதிபதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நன்கு அறிந்திருப்பார்.

அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளாரா??? அல்லது இது அடுத்த தேர்தலில் தன்னுடன் உள்ள தமிழ்க் கட்சிகளை ஒன்று சேர்த்து நீதியற்ற முறையில் வெற்றி பெறச் செய்து அரைகுறைத் தீர்வுத் திட்டமொன்றை தமிழர்கள் மீது திணிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட கருத்தா??? தமிழ் சமூகம் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆலோசனை வழங்கிய புத்தி ஜீவிகள் தமிழ் சமூகத்தை இன்னும் தெளிவுபடுத்த வேண்டும்.

Saturday, January 23, 2010

ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம்.- 02

தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தனி நாட்டுக் கொள்கை ஒன்றும் எழுந்தமான சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அதாவது இந்த கொள்கை சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இங்கு தனித் தேசம் ஒன்று தோற்றம் பெறுவதற்கான சர்வதேச நியமங்கள் தொடர்பிலும், அதன் அடிப்படையில் தமிழ்ச் சமூகம் இலங்கையில் ஒரு தனித் தேசத்தை கட்டியமைக்கும் உரிமைகள் தொடர்பிலும், அதனை சிங்களத் தலைமைகள் கடந்த காலங்களில் எவ்வாறு கையாண்டிருந்தன என்பது பற்றியும் நோக்குவோம்.

ஒரு தனித் தேசத்துக்கான உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் ஐந்து அடிப்படை விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

01 ) தொடர்ச்சியான தொன்மையான நிலப்பரப்பு.
02 ) அந்த நிலப்பரப்பிற்கேற்ற குடிப்பரம்பல்.
03 ) தொன்மையான மொழிப்பயன்பாடு.
04 ) தன்நிறைவுப் பொருளாதாரம். (உணவுத் தேவைக்கு)
05 ) நீண்ட வரலாறுடன் கூடிய கலை கலாச்சாரம்.

இவையே ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள மேற்படி ஐந்து அடிப்படை அம்சங்களுமாகும்.

தொடர்ச்சியான தொன்மையான நிலப்பரப்பு.

ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஐந்து அடிப்படை அம்சங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்தவகையில் ஒரு குறிப்பிட்ட துண்டுபடாத தொடர் நிலப்பரப்பில் நீண்ட வரலாறுடன் ஒரு குறித்த இனம் வாழ்ந்துவர வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

உண்மையில் இலங்கையைப் பொறுத்தவரையில் லாட நாட்டிலிருந்து வந்த விஜையனதும், எழுநூறு தோழர்களினதும் வருகையைத் தொடர்ந்தே ஆரிய இனம் (சிங்களவர்கள்) இங்கு வருகை தந்ததாக வரலாற்றின் வழியே அறியமுடிகின்றது. மேலும் முஸ்லீம் சமூகமும் வியாபார நோக்கில் இங்கு வருகை தந்ததாகவும் சொல்லப்படுகின்றது. (இதை அவர்கள் மறுக்கவுமில்லை.)

ஆனால் தமிழ் இனம் இலங்கைக்கு எப்போது வந்தார்கள் என்பது தொடர்பில் எந்தவொரு வரலாற்று குறிப்புக்களும் இல்லை என்பதுடன் இலங்கையின் பூர்வீகக் குடிகளான இயக்கர், நாகர் பரம்பரையில் நாகர் குலத்திலிருந்து வந்தவர்களே தமிழர்கள் என்றும் நம்பப்படுகின்றது.

எனவே இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற போது தமிழ் இனம் இந்த நாட்டுக்கு வந்தேறு குடிகளல்ல என்பதுடன் தமிழர்களே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் இந்தத் தமிழ் இனம் நாகர் காலம் முதலே இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பில் வாழ்ந்து வந்தமை வெள்ளிடை மலை.

இவ்வாறாக தமிழ் இனத்திற்கென ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பு தொன்றுதொட்டே உள்ளமை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் "தொடர்ச்சியான, தொன்மையான நிலப் பரப்பு" என்கின்ற அம்சத்துடன் பொருந்துகின்றமை தமிழ்ச் சமூகத்துக்கு பிரிந்து சென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்குவதற்கு சாதகமாக உள்ளது.

தமிழ் சமூகத்திடம் ஒரு தொன்மையான, தொடர் நிலப்பரப்பு உள்ளதை நன்கு அறிந்துதான் சிங்களத் தலைமைகள் வடக்குக் கிழக்கு பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டன. இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை சிங்களத் தலைமைகள் வடக்குக் கிழக்கு மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களில் அமைத்துள்ளமை இதனை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

அந்தவகையில் வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தையும் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கும் நோக்கில் "வெலிஓயா" குடியேற்றமும், கிழக்கில் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பிரிக்கும் வகையில் "அல்லைக் கந்தளாய்" குடியேற்றமும், மட்டக்களைப்பையும், அம்பாறையையும் பிரிக்கும் நோக்கில் "கல்லோயா" குடியேற்றமும் சிங்களத் தலைமைகளால் இந்த நோக்கத்துக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களில் மிகவும் முக்கியமானவையாகும். தவிர மாவட்டங்களின் உட்பகுதியிலும் திட்டமிட்ட பல சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த நிலப்பரப்பிற்கேற்ற குடிப்பரம்பல்.

இலங்கையில் தமிழ்ச் சமூகத்தின் வீதத்தை சிங்கள இனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோதும் வட கிழக்கில் செறிவாக வாழ்ந்த, வாழ்ந்துவருகின்ற தமிழ்ச் சமூகத்தின் எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபோதும் நமது இனம் போதியளவு குடிப்பரம்பலுடனே உள்ளது.அதாவது மாகாணப் பிரிப்பில் ஏழு மாகாணங்களில் சிங்களவர்களும், இரண்டு மாகாணங்களில் தமிழர்களும் என்ற அடிப்படையில் இதனை நோக்கலாம்.

மேலும் இப்போது தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரர்களையும் ஒரு தனித் தேசத்துக்குள் உள்வாங்கும் போக்கு உள்ளமையால் இது மேலும் வலுவடைகின்றது. அதுமட்டுமன்றி அண்மையில் தனி தேசப் பிரகடனம் செய்த கொசோவா போன்ற நாடுகளின் குடிப்பரம்பல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போதும் நமது இனத்தின் குடிப்பரம்பலில், மக்கள் தொகையில் போதுமான தன்மை இருக்கின்றது.

இவ்வாறாக தமிழர்களுக்கு ஒரு தனித் தேசத்தை கட்டியமைக்க போதுமான மக்கள் தொகை, குடிப் பரம்பல் இருப்பதையும் சிங்களத் தலைமைகள் அன்று நன்கு அறிந்திருந்ததன் காரணமாகத்தான் வட கிழக்கின் அபிவிருத்திகளில் அக்கறை செலுத்தாமல் என்ன தேவை என்றாலும் அவற்றை கொழும்பு போன்ற இடங்களிற்கு வந்து நிறைவேற்ற வேண்டுமென்கின்ற நிலையை தோற்றுவித்து வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களை தலை நகர் கொழும்புக்கு இடம்பெயரச் செய்து வடகிழக்கில் தமிழர் செறிவை குறைக்க முயன்றன.

மேலும் சிங்கள தேசம் ஒன்றுபட்டு வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லீம்,தமிழ் சமூகத்துக்குள் கலவரங்களை ஏற்படுத்த முயன்றதும் இதன் அடிப்படையில்தான்.அத்துடன் திட்டமிட்ட இனக் கலவரங்களை ஏற்படுத்தி சிங்களத் தலைமைகள் தமிழர்களை வெளிநாடுகளுக்கு புலம்பெயரச் செய்ததும் இவ்வாறான ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே.

தொன்மையான மொழிப்பயன்பாடு.

நமது இனத்திற்கென மிகவும் தொன்மையான, இனிமையான எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் அமைந்த நம் தாய் மொழியாம் தமிழ் மொழி உள்ளமை "தொன்மையான மொழிப் பயன்பாடு" என்கின்ற அடிப்படை அம்சத்தில் நமக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு அரசியல் சாசனத்தை எழுதவோ, தொடர்பாடல்களுக்காகவோ ஒரு தனித் தேசத்திற்கென ஒரு சொந்த மொழி வேண்டும் என்கின்ற அடிப்படையில்தான் ஐக்கியநாடுகள் சாசனம் "தொன்மையான மொழிப் பயன்பாடு" என்கின்ற அம்சத்தை சேர்த்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் சமூகத்திடம் சொந்தமான ஒரு மொழி உள்ளமை எதிர்காலத்தில் அவர்கள் பிரிந்து செல்ல வலுச் சேர்க்கும் என்பதை நன்கு அறிந்ததன் விளைவாகத்தான் அன்றைய சிங்களத் தலைமைகள் தமிழ் மொழியை அரச கரும மொழிகளுக்குள் உள்ளடக்காமல் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தன. இதன் ஊடாக தமிழர்கள் அரச சேவைகளையும் இதர சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்காக சிங்களம் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழ் மொழியின் பயன்பாட்டை குறைக்கலாம், இலங்கையில் தமிழ் மொழியை அழித்துவிடலாம் என்று சிங்களத்தலைமைகள் சிந்தித்தன.

எது எப்படியோ நமது தந்தை செல்வநாயகம் போன்ற அரசியல் தலைமைகளால் இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.இலங்கையில் ஒரு தனித் தேசம் உருவாக்க நமக்கென ஒரு மொழி வேண்டுமென்கின்ற அடிப்படையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட தமது கட்டுப் பாட்டுப் பகுதியில் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியதாக நம்பலாம்.


தன்நிறைவுப் பொருளாதாரம். (உணவுத் தேவைக்கு)

உண்மையில் ஒரு புதிய தேசத்தின் உருவாக்கம் இன்னுமொரு நாட்டில் பொருளாதாரத்தை சுரண்டும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்கின்ற வகையில்தான் "தன்நிறைவுப் பொருளாதாரம்" என்னும் அம்சம் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே ஒரு தேசத்துக்குள் வாழ்ந்து பின்னர் பிரிந்து செல்வதனால் அந்த மக்களால் புதிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்.


எது எப்படி இருப்பினும் இலங்கைத் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யும் அளவுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏராளமான வளங்களை தன்னகத்தே வைத்திருக்கின்றார்கள். உதாரணமாக உணவுத் தேவைக்காக வட கிழக்கில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வயல், தோட்ட நிலங்கள் உள்ளன. அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கான கடல் வளமும் காணப்படுகின்றது. எனவே இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் இன்னுமொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு போதியளவு வசதிகளை தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது.


உண்மையில் சிங்களத் தலைமைகள் இந்த விடயத்திலும் தங்கள் பார்வையை பலமாகச் செலுத்தத் தவறவில்லை. அதாவது எவ்வளவோ வயல்,தோட்ட நிலங்களை சிங்களத் தலைமைகள் சிங்கள விவசாயிகளிடம் கையளித்த வரலாறுகளும் உண்டு என்பதுடன் வட கிழக்கில் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கு சிங்களத் தலைமைகளால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. இவை எல்லாம் நமது பொருளாதாரத்தை சிதைக்க சிங்கள தலைமைகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதித் திட்டங்களாகும்.

நீண்ட வரலாறுடன் கூடிய கலை கலாச்சாரம்.

தமிழ் சமூகத்துக்கென ஒரு கட்டமைக்கப்பட்ட கலாச்சாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் கலைத் துறை என்று வருகின்றபோது தமிழர்களுக்கு நிகர் யாருமே இல்லை என்கின்ற அளவுக்கு இயல்,இசை,நாடகம் என்கின்ற முத்தமிழும் முழங்கும் கலைத்துறை சான்றுபகர்கின்றது.

சிங்களத் தலைமைகளால் திட்டமிட்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது பல வரலாற்று ஆவணங்களை அழிக்கும் நோக்குடன் மட்டுமன்றி தமிழர்களின் பாரம்பரிய கலைத் துறைகள் தொடர்பான நூல்களை சிதைப்பதற்குமாகும். அத்துடன் ஆலயங்களில் சிங்களத் தலைமைகளால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகளும் இதன் நோக்கிலமைந்தவைதான் என்பதில் சந்தேகம் இல்லை.


இவ்வாறாக ஒரு தனித் தேசத்தை உருவாக்குவதற்கான சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டுள்ள தமிழ் இனம் தந்தை செல்வநாயகம் அவர்களினால் உருவாக்கப்பட்ட தனித் தேசக் கோட்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றால் மேற்சொல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து முக்கியமான அடிப்படை அம்சங்களில் எப்போதும் வலுவான நிலையில் இருப்பது அவசியமாகும்.

ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம் முற்றும்..

Saturday, January 16, 2010

ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம்.- 01

இலங்கையைப் பொறுத்தவரையில் கண்டி ராஜ்ஜியம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சி காண்பதற்கு முன்னர் அது ஒரு தனி தேசமாக ஒரு குடையின் கீழ் இருந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் குறைவு அல்லது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு முன்னர் இலங்கையில் பல்வேறு ராஜ்ஜியங்களும், சிற்றரசுகளும் இருந்தமையை மகாவம்சம் கூட உறுதிப்படுத்துகின்றது.

இந்த நிலையில் பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியின் காரணமாகத்தான் இலங்கையில் இன்றும் இன முரண்பாடுகள் தொடர்கின்றன. அதாவது இலங்கையில் இருக்கும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதே பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியின் பிரதான நோக்கமாக இருந்தது.

இவ்வாறாக பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியில் முதலாவதாக சிங்கள-முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் இன முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த கலவரத்தின்போது தமிழ் சமூகம் சிங்கள சமூகத்துக்கு ஆதராவாக இருந்தமையும், சேர் பொன் ராமநாதன் அவர்கள் சிங்களவர்களுக்காக பிரித்தானியா சென்று பேசியமையும், பின்னர் சிங்களவர்கள் அவரை தேரில் ஏற்றி இழுத்து வந்தமையும் வரலாறு.

இவ்வாறான ஒரு நிலையில்தான் இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கி பிரித்தானியர்கள் வெளியேறினார்கள். உண்மையில் சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கைக்குள் இன முரண்பாடுகள் பரவலாக இருந்தபோதிலும் அவை பூதாகரமாக வெளித்தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்தவகையில் சுதந்திரத்துக்கு பின்னர்தான் சிங்களவர்கள் தமிழ், முஸ்லீம் சமூகங்களை அடக்கியாள தொடங்கினார்கள்.

சிங்கள சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ், முஸ்லீம் சிறுபான்மைச் சமூகம் சாத்வீகமான வழிகளில் பல போராட்டங்களை முன்னெடுத்தது. இந்தப் போராட்டங்களில் தந்தை செல்வநாயகம் அவர்களின் பங்கு மிக மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தமிழ் சமூகத்திற்கான சமவுரிமை தொடர்பிலும், தமிழ் மொழியை அரச கரும மொழியாக்க வேண்டுமென்றும் தந்தை செல்வநாயகம் அவர்கள் உறுதியுடன் போராடினார்.தந்தை செல்வநாயம் அவர்கள் தன் வாழ்வின் பெரும் பகுதியை தமிழர்களுக்காகவும், அவர் தம் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழியின் இருப்பிற்காகவும் செலவிட்டவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

நியாயமான வழிகளில், சிறு துளியும் வன்முறைகள் இல்லாமல் தந்தை செல்வநாயகம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீக போராட்டங்களை சிங்களத் தலைமைகள் அடக்கு முறைகளையையும், வன்முறைகளையையும் கட்டவிழ்த்துவிட்டும், ஒப்பந்தங்கள் என்ற பெயரில் சில போலி நாடகங்களை அரங்கேற்றியும் தணித்துவிடலாம் என்று நினைத்தபோதிலும் தந்தை செல்வா அவர்கள் மிகவும் உறுதியுடனும், தெளிவுடனும் தனது போராட்டங்களை முன்னெடுத்தார்.

சிங்களத் தலைமைகளால் தந்தை செல்வநாயகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகிய இரண்டும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு ஒப்பந்தங்களுடன் இலங்கை-இந்திய ஒப்பந்தம், பிரபா-ரணில் ஒப்பந்தம் ஆகியனவும் அடங்கலாக தமிழர்கள் இதுவரை இன முரண்பாட்டிற்கான தீர்வைத் தேடித்தரும் என்று மொத்தம் நான்கு பிரதான ஒப்பந்தங்களை எதிர்பார்த்தார்கள். ஆனாலும் இவ் ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறியதுடன் அவற்றை கிழித்தெறிந்த பெருமையும் சிங்கள தலைமைகளையே சாரும்.

ஒப்பந்தங்கள், வன்முறைகள் என்று பல வழிகளிலும் தந்தை செல்வநாயகத்தின் போராட்டங்களை தணிக்க சிங்களத் தலைமைகள் முயன்று தோற்ற நிலையிலும், சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்கின்ற நிலையிலும்தான் "தமிழ் சமூகத்திற்கான ஒரே தீர்வு பிரிந்து சென்று தனித் தேசம் ஒன்றை நிறுவுவது" என்கின்ற தீர்மானம் வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்டது..

இவ்வாறாக தந்தை செல்வநாயகம் அவர்களால் எடுக்கப்பட்ட தனித் தேசம் என்கின்ற கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஜனநாயக வழிமுறைகளில் போராடுவதனால் எந்த வித பலனும் விளையப்போவதில்லை என்கின்ற நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி பல்வேறு ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

உண்மையில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் என்கின்ற நிலை இருந்தாலும் எல்லா ஆயுத இயக்கங்களினதும் உருவாக்க நோக்கம் ஆரம்ப காலங்களில் "தமிழீழம்" என்பதாகவே இருந்தது. அதாவது இயக்கங்களால் வேறுபட்டிருந்தாலும் எல்லா போராளிகளினதும் இலட்சியம் ஒன்றாகவே இருந்தது. இவ்வாறாக தோற்றம் பெற்ற ஆயுத இயக்கங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளட், ரெலோ, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈரோஸ் போன்றவை முக்கியமான இயக்கங்களாக காணப்பட்டன.இந்த இயக்கங்களில் ஆரம்ப காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பு மிகவும் பலம்பொருந்திய இயக்கமாக காணப்பட்டது.

இவ்வாறாக தோற்றம் பெற்ற இயக்கங்களுக்கு இந்தியா தனது பிராந்திய நலனின் அடிப்படையில் ஆயுதங்களை வழங்கியதுடன், ஆயுதப் பயிற்சிகளையையும் வழங்கியிருந்தது. அதாவது இலங்கையில் ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தால் அது தனது வல்லாதிக்க சக்திக்கு எதிர்காலத்தில் சவாலாக அமைந்துவிடும் என்பதே இந்திய தேசம் தமிழ் ஆயுதக் குழுக்களை ஊக்குவிக்க காரணமாக அமைந்திருந்தது. மேலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் இந்தச் செயலுக்கான காரணம் என்று சொல்ல முடியும்.

இந்தியா தனது அரசியல் தேவைகளுக்காக ஊக்குவித்த ஆயுத இயக்கங்கள் குறுகிய காலத்துக்குள் தம்மை வளர்த்துக் கொண்டமையாலும், எல்லா இயக்கங்களும் இலட்சியத்தால் ஒன்றுபட்டிருந்தமையாலும் எதிர்காலத்தில் இந்த இயக்கங்கள் மேற்குலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தம்மை மேலும் பலப்படுத்தி எல்லா இயக்கங்களும் ஒன்றுபட்டு இந்தியாவுக்கு எதிராக திரும்பினால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்கின்ற இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இயக்கங்களின் இலட்சியங்களைச் சிதைக்கும் செயலில் இந்தியா இறங்கியது. மேலும் தென்னிலங்கை அப்போது இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையும் இந்த செயலுக்கு வழிவகுத்தது.

இந்தியா தனது திட்டங்களை அரங்கேற்றுவதற்காக ஒவ்வொரு இயக்கங்களினதும் தளவைர்களை தமது நாட்டுக்கு அழைத்து மூளைச் சலவை செய்யத்தொடங்கியது. இதில் பல தலைவர்களுக்கு பணத்தாசையும், பதவியாசையும் ஊட்டப்பட்டது. அந்தவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைத் தவிர மற்றைய இயக்கங்களின் தலைவர்களிடத்தில் இந்தியாவின் மூளைச்ச் சலவை வெற்றியளிக்கவே ஒவ்வொரு இயக்கங்களும் தமது "தமிழீழம்" என்கின்ற கொள்கையிலிருந்து விலகிக்கொண்டன. இதனால் அதிருப்தியடைந்த குறித்த இயக்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இயக்கங்களைவிட்டு வெளியேறியதுடன், சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

இந்தியாவின் இந்த மூளைச் சலவையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வடக்கு கிழக்கிற்கான முதலமைச்சர் பதவி தருகின்றோம் போராட்டத்தை கைவிடும்படி இந்தியா கேட்டுக்கொண்ட போதிலும் பிரபாகரன் அதனை நிராகரித்ததாகவும், தமிழீழம் என்கின்ற கொள்கையிலிருந்து எந்தக் காலத்திலும் விலக முடியாது எனத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

உண்மையில் இன்று தமிழீழம் என்று பேசினால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய கொள்கை என்கின்ற அளவுக்கு தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழக் கொள்கையில் புலிகள் உறுதியுடன் இருந்துள்ளார்கள். இந்த நிலையில் இலங்கையில் ஒரு தனித் தேசம் அமைக்க தமிழர்களுக்கு உரிமை உண்டா?? அதாவது பிரிந்து சென்று ஒரு தனியரசை நிறுவுவதற்கான சர்வதேச நியதிகளுக்கு நமது இனம் உட்பட்டுள்ளதா?? என்பதனை ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம்-02 இல் நோக்குவோம்.

ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம் தொடரும்...

Thursday, January 14, 2010

தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டா?? தைப்பொங்கல் வாழ்த்துக்கள்...

தை பிறந்தால் வழி பிறக்குமென்பது காலம் காலமாக தமிழர்களின் மத்தியில் இருந்து வரும் ஒரு நம்பிக்கையாகும். அந்த வகையில் பல இழப்புக்களையும், துன்பங்களையும் சுமந்துகொண்டிருக்கும் தமிழர்கள் இந்தத் தைப்பொங்கலையும் அன்புடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்த நிலையில் தைப்பொங்கலும் வந்துவிட்டது. ஆனபோதிலும் எமது எத்தனையோ உறவுகள் சொந்த வீட்டில் சொந்த பூமியில் தைப்பொங்கலை கொண்டாட முடியாத அளவுக்கு நிலைமை அமைந்துள்ளமை துரதிஸ்டவசமானது.

இவ்வாறான சூழ்நிலையில் தைப்பொங்கலை நம்மவர்கள் கேளிக்கைகளை குறைத்து கொஞ்சம் அடக்கமாகத்தான் கொண்டாடியிருக்கின்றார்கள். குறிப்பாக புலம்பெயர் வாழ் சொந்தங்கள் தாயகத்தின் நிலைமைகளை கருத்தில்க்கொண்டு இந்தப் பொங்கலை வரவேற்றிருக்கிறார்கள். உண்மையில் நன்றி மறப்பது நன்றன்று என்பதுக்கு இணங்க சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக உழவர்களும், சூரியனுக்கும், உழவர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக ஏனையவர்களும் கொண்டாடும் பண்டிகைதான் தைப்பொங்கல் என்று அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் ஒரு புதிய கண்டுபிடிப்பாக சில வருடங்களுக்கு முன்னர் தைப்பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானவர்களைப் போலவே எனக்கும் இதில் உடன்பாடு கிடையாது. அதாவது தமிழ் மரபின்படி தை மாதம்தான் வருடத்தின் முதலாவது மாதம் என்று சொல்வதற்கில்லை. ஆங்கில நாட்காட்டிகளின் பிரகாரம்தான் தைமாதத்தை வருடத்தின் முதலாவது மாதமாக நாம் கொள்கின்றோமே தவிர தமிழ் மரபின்படி சித்திரை மாதமே வருடத்தின் முதலாவது மாதம் என்பது காலங்காலமாக நமது மரபின் வழி தொடர்கின்ற ஒரு விடயம்.

எனவே தமிழ் நாட்காட்டியின் பிரகாரம் தைப்பொங்கல் தைமாதம் முதலாம் திகதி வருகின்றது என்பதற்காக அதனை தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வது பொருத்தமற்றது. மேலும் தைப்பொங்கலை தமிழர்கள் என்ன நோக்கத்துக்காக கடைப்பிடிக்கின்றார்களோ அதனை இது சிதைக்கும் என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும். மேலும் சித்திரை வருடப்பிறப்பு (தமிழ்ப் புத்தாண்டு.) சூரியன் முதலாவது ராசியான மேட ராசியிலிருந்து இறுதி ராசியான மீன ராசியில் சஞ்சரிக்கும் நாளில் அனுஷ்டிக் கப்படுகின்றது.

உண்மையில் நமக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதற்காக நம் முன்னோர்கள் வகுத்த சித்திரைப்புத்தாண்டை மாற்றி தைப்பொங்கலை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பது பொருத்தமற்றது. ஒரு விடயம் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதனை இறுதி வரை அதே நோக்கத்துக்காக பயன்படுத்துவது முக்கியமானது.

இங்கு தைப்பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை என்கின்ற நிலை மாறி அது இந்துக்களின் பண்டிகை என்கின்ற நிலை தற்போது காணப்படுகின்றமை வருத்தத்துக்குரியது. நமது முன்னோர்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருந்த போது எல்லா தமிழர்களும் தைப்பொங்கலை கொண்டாடியதனால் அது தமிழர்களின் பண்டிகையாக இருந்தது. எனினும் இப்போது தமிழர்கள் மத்தியில் பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் உள்ளமையினால் தைப்பொங்கல் இந்துக்களுக்கான பண்டிகை என்கின்ற அடையாளத்துடன் உள்ளது.

எது எப்படி இருப்பினும் தைப்பொங்கல் வேறு தமிழ்ப் புத்தாண்டு வேறு என்பது எனது கருத்து. மேலும் எனது வலைத் தளத்துக்கு வந்து செல்லும் வாசகர்களுக்கும், கருத்துரைகளால் உற்சாகம் தரும் உறவுகளுக்கும், திரட்டிகளில் எனது பதிவுகளுக்கு வாக்களிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிமையான தைப்பொங்கல் வாழ்த்துக்கள். இந்த தைப்பொங்கல் நாளில் உங்கள் அன்பையும், ஆதரவையும் இன்னும் இன்னும் எதிர்பார்ப்பதுடன் பதிவுகளும், பார்வைகளும் தொடரும்...

Saturday, January 9, 2010

ஜனாதிபதித் தேர்தல்!!!! இலங்கை அரசியல் கலங்கிய குட்டை...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு அதன் பரபரப்பு மக்களிடத்தில் தொற்றிக் கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தந்தையார் வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பனாகொடை இராணுவ முகாமில் தனது 86 ஆவது வயதில் காலமானார் என்கின்ற செய்தி வெளியாகியது.

இந்த நிலையில் காலஞ் சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் அவரின் உறவினர்களின் வேண்டுதலுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் வல்வையில் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளன. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயாரை சிவாஜிலிங்கத்தின் பொறுப்பில் விடுதலை செய்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் 22 பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதொடர்பான இறுதித் தீர்மானங்களை எடுத்த கூட்டத்துக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை என்று தெரிகிறது.

அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி வெளிநாட்டில் தங்கியிருப்பதாலும், பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் கைது செய்யப்பட்டிருப்பதனாலும் இந்தக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோர் கட்சிக் கொள்கைகளுக்கு கட்டுப்படாத காரணத்தினாலும் மேற்படி கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறாக பல பல சிக்கல்களுக்கு மத்தியில் எல்லா அரசியல் முடிச்சுக்களையும் முடிந்தவரை அவிழ்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா-சம்பந்தன் கட்சியின் கட்டுக்கோப்பு குலையாமல் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றமை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு சரியானதா?? என்கின்ற கேள்வி பொதுவாக எல்லோரிடமும் இயல்பாக எழுந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதைவிட நல்ல முடிவை எடுக்க முடியாது என்கின்ற நிலையிலையே இந்த முடிவுக்கு வந்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 20 தமிழ்ப் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்றும், பேரம் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் கூறியதன் அடிப்படையில் பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர் தங்களால் முடிந்தளவு பேரம் பேசியே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாக தெரிகின்றது.

அந்தவகையில் வடக்குக் கிழக்கு இணைப்பு, கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் விடுதலை, இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு என்கின்ற மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய சாதகமான பதில்களின் அடிப்படையிலையே இந்த ஆதரவு முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது. இவை தொடர்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் பேசிய போது வடக்குக் கிழக்கு இணைப்பை அவர் நிராகரித்ததாக தெரிகின்றது.

எனவே தனது கட்சி அங்கத்தவர்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் அதே நேரம் கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இதனைவிட இன்னுமொரு நல்ல முடிவை எடுக்கமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் 20 புத்தி ஜீவிகள் ஒன்றாக வெளியிட்ட அறிக்கை தொடர்பிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அத்துடன் இந்த புத்திஜீவிகள் மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கவும் இடமுண்டு.

எது எப்படியிருப்பினும் தீர்க்க தரிசனமும், தூர நோக்கும் கொண்ட அரசியல் முடிவுகளை எடுப்பதற்கும், தமிழ் அரசியல் தலைமைகளை வழிநடாத்திச் செல்வதற்கும் பொருத்தமான தமிழ்ப் புத்திஜீவிகள் அரசியலுக்குள் நேரடியாக ஆலோசகர்களாகவும், வேட்பாளர்களாகவும் களமிறங்க வேண்டியது இன்றைய தமிழர் தரப்பு தேவையாக உள்ளது என்பதையும் கவனத்தில்க் கொள்ள வேண்டும்...

ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான நிலைமைகள் இவ்வாறு இருக்க அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரான சிவாஜிலிங்கத்திடம் காலஞ் சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடலை கையளித்து இறுதிக் கிரியைகளை அவரின் பொறுப்பில் ஒப்படைத்தமை சிவாஜிலிங்கத்துக்கு மேலும் அரசியல் பலத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்வு கூறப்படுவதுடன், இதனைக் கொண்டு தமிழ்ச் சமுகத்தின் வாக்குகளை சிதைப்பது அரசின் நோக்கமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டலாம், அதாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவந்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் வாங்கப்போவதில்லை என்றும், முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் பிரபாகரனின் பெற்றோரை வைத்து அரசியல் பேசினார்கள்.

நிலைமை இவ்வாறாக இருக்க இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் மும்முரமான பிரச்சாரங்களில் குதித்துள்ளார்கள். அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகா உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுமென்று அறிவித்தார். மேலும் தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாளைய தினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். அரசாங்கம் ஏற்கனவே தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக கடும் பிரயத்தனம் எடுத்துள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரலிற்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இன்னுமின்னும் கடும் முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

உண்மையில் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் அது பல பலவீனங்களைக் கண்டுவருவதாகவே தெரிகின்றது. அந்தவகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரதியமைச்சர் செல்லச்சாமி விலகிச்ச் சென்று ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கின்றார். அத்துடன் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகிச்சென்று அரசாங்கத்துடன் இணைந்திருந்த மட்டக்களப்பு நகர மேயர் சிவகீத்தா பிரபாகரனும் ஜெனரலின் "நம்பிக்கைக்குரிய மாற்றம்" என்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியினருடன் இணைந்துள்ளார்.மேலும் சனல் 4 தொலைக்காட்சி ஒளி நாடா தொடர்பிலும் அரசு சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றது.

இந்த நிலையில் அண்மையில் மறைந்த அமரர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பிப் பலன் இல்லை என்றும் இந்தியா இனப்பிரச்சினைத் தீர்வில் உதவப்போவதில்லை என்றும் மக்கள் தமக்கான உரிமைகளை தாமே பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஒரு பத்திரிக்கை நேர்காணலில் சொல்லியுள்ளார்.

ஆக மொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்றபோது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்ப்பால் இலங்கை அரசியல் கலங்கிய குட்டை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.