பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றுமொரு இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-இருபது தொடர் சம நிலையில் முடிவடைந்திருக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே கடந்த 09 ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையணி 29 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியை வென்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்கின்ற எதிர்பார்ப்பில் இன்றைய தினம் இலங்கை அணி களமிறங்கியது. மறுபுறத்தில் இந்தப் போட்டியை எப்படியாவது வெற்றிகொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் புகுந்தது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றும் முதலில் துடுப்பெடுத்தாமல் இலங்கையணியை துடுப்பெடுத்த ஆட பணித்தமைதான் தோல்விக்கான காரணம் என்று சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கை நேரப்படி மாலை 5 .30 இற்கு மொஹாலியில் ஆரம்பமாகிய இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.
இலங்கையணி சார்பாக அணித்த் தலைவர் குமார்சங்கக்கார (59 ) அரைச் சதம் கடந்தார். மேலும் சிந்திக்க ஜெயசிங்க 38 ஓட்டங்களையும், சனத் ஜெயசூரிய 31 ஓட்டங்களையும் பெற்று ஓரளவுக்கு பிரகாசித்திருந்தார்கள். உதிரிகளாக இந்திய அணியினரால் இந்தப் போட்டியில் 24 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இருபது ஓவர்கள் நிறைவில் இலங்கையணி ஏழு விக்கட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மேலும் இந்தப் போட்டியில் சனத் ஜெயசூரிய 25 ஓட்டங்கை பெற்றபோது 20 -20 போட்டியில் 600 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது வீரராக தன்னைப் பதிவு செய்துகொண்டார். இதுவரையில் 23 இருபதுக்கு-இருபது போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இன்று பெற்ற 31 ஓட்டங்கள் அடங்கலாக மொத்தமாக 606 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். ஏற்கனவே இந்திய அணியுடன் நடைபெற்ற இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையணியின் மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டில்ஷான் 600 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரராக தன்னை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையணி நிர்ணயித்த 207 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணி 19 .1 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பாக வீரேந்திர ஷேவாக் (64 ), யுவராஜ்சிங் (60 ) அரைச் சதம் கடந்தனர். மேலும் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 46 ஓட்டங்களையும், கெளதம்கம்பீர் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்கள். உதிரிகளாக இலங்கையணியினரால் இந்தப் போட்டியில் 7 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டி யுவராஜ்சிங்கின் 06 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இன்றைய தினம் தனது இருபத்தெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டே போட்டியிலும் கலக்கிய இந்திய அணியின் யுவராஜ்சிங் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடிவரும் உத்ரபிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இருபத்தியிரண்டு வயதான சுதீப் தையகி என்கின்ற வலது கைப் பந்துவீச்சாளர் தனது முதலாவது சர்வதேச இருபதுக்கு-இருபது போட்டியில் விளையாடியிருந்தார்.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்தபோது இலங்கையணி ரசிகர்கள் இருபதுக்கு-இருபது தொடரை இலங்கை கைப்பற்றும் என்று நம்பியிருந்தார்கள்..... இனி எதிர்வரும் பதினைந்தாம் திகதி ராஜ்கோர்ட்டில் ஆரம்பமாகும் நான்கு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கையணி கைப்பற்றுமா??? வழக்கம்போல பொறுத்திருந்துபார்ப்போம்...

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்தபோது இலங்கையணி ரசிகர்கள் இருபதுக்கு-இருபது தொடரை இலங்கை கைப்பற்றும் என்று நம்பியிருந்தார்கள்..... இனி எதிர்வரும் பதினைந்தாம் திகதி ராஜ்கோர்ட்டில் ஆரம்பமாகும் நான்கு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கையணி கைப்பற்றுமா??? வழக்கம்போல பொறுத்திருந்துபார்ப்போம்...

No comments:
Post a Comment