இவ்வாறான ஒரு சூழ் நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இன்றுதான் எனது அடுத்த பதிவு வருகிறது. ஒரு சந்தோஷமான செய்தியை, அதாவது எனது நீண்டகால எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துவிட்டு அந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து மகிழ்வதற்காக இத பதிவை வரைகிறேன். எப்போதும் வானொலி, ஒலிபரப்பு என்று வாழும் எனக்கு சந்தோஷமான செய்தி என்று கோடிட்டு சொல்வதென்றால் அது நிச்சயமாக இந்தத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
சரி விடயத்துக்கு வருகிறேன். கடந்த பத்து வருடங்களாக எனக்குள் ஒரு ஆசை. அதை ஆசை என்று சொல்வதை விட எனது இலட்சியம் என்றும் சொல்லலாம். அதாவது ஒரு வானொலியை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் இலட்சியம். இது கல்லூரியில் கல்வி கற்ற நாட்களிலையே எனக்குள் உதித்துவிட்டது. அந்தவகையில் கல்லூரியில் கல்வி கற்ற நாட்களில் கண்காட்சி நிகழ்வுகளில் நண்பர்களுடன் சேர்ந்து செய்த ஒலிபரப்புக்கள்தான் இந்த இலட்சியத்தின் அடிப்படை.
நாங்கள் கல்லூரியில் கல்விகற்றுக் கொண்டிருந்தபோது 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி "வானவில் மாணவர் ஒலிபரப்புச் சேவை" என்கின்ற பெயரில் ஒரு வானொலியை செய்தோம். எமது சூழலில் அப்போதிருந்த குறுகிய வளத்தைக் கொண்டு பண்பலையில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு எமது வானொலியை ஒலிபரப்ப முடிந்தது. வேறு எவரது உதவியும் இல்லாமால் எமது சொந்த முயற்சியில் அப்போது இளம்பராயத்திலிருந்த எங்களால் ஒரு வெற்றிகரமான வானொலியை நடாத்தி கல்லூரி சமூகத்தினதும், ஏனையவர்களினதும் பாராட்டினைப் பெற முடிந்தது அளவில்லாத மகிழ்ச்சி. அன்றுதான் நான் ஒரு வானொலி அறிவிப்பாளனாக உருவாக வேண்டுமென்று எனக்குள் இலட்சியத்தை வரித்துக் கொண்டேன்.
என்னோடு கூட இருந்த நண்பர்களும் வானொலித்துறையில் அதிக ஆர்வம்காட்டியதால் அவ்வப்போது எமது கல்லூரியிலும், ஏனைய அயல்பாடசாலைகளிலும் நடைபெறும் கண்காட்சிகளில் வானவில் ஒலிபரப்பாகத் தவறுவதில்லை. ஆரம்பத்தில் வானவில் மாணவர் ஒலிபரப்புச் சேவையாக ஆரம்பித்த நாங்கள் எமது வானொலியின் பெயரை பின்நாளில் வானவில் fm என மாற்றிக் கொண்டோம். இப்படி ஆரம்பித்த எமது பயணத்தில் கால சூழலால் பல்வேறு சோகங்கள், பிரிவுகள் நிகழ்ந்தன. அதாவது கல்லூரி வாழ்வு முடிந்ததும் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிக்க நேர்ந்தது. அறிவிப்பாளனாக உருவாக வேண்டுமென்ற இலட்சியத்திலிருந்த நான் கொழும்பை நோக்கி நகர்ந்தேன். முறையான ஊடக கற்கை நெறியினைக் கற்று தாளம் fm வானொலியில் எனது அறிவுப்பு பயணத்தை ஆரம்பித்தேன். பின்னர் டான் தமிழ் ஒலியில் அறிவிப்பாளனாக பணிபுரிந்தேன்.
கல்லூரிக் கால நண்பர்களைப் பிரிந்து நீண்ட காலமாக இருந்த எனக்கு மீண்டும் நண்பர்களின் தொடர்புகள் கிடைத்தாலும் எப்போதும் எமது வானவில் fm ஒலிபரப்பில் துணையிருக்கும் சஞ்ஜீவனின் தொடர்புமட்டும் நிரந்தரமாக கிடைக்காமலே போய்விட்டது. ஆம் சஞ்ஜீவன் எங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டான். சஞ்ஜீவன் இனி எங்களுடன் பேசமாட்டான். அவன் குரலை இனி கேட்கமுடியாது. ஆனால் உற்ற நண்பனின் நினைவுகளை அழிக்கமுடியாது. அழியாத அவன் நினைவுகளுடன் ஏனைய நண்பர்களின் தொடர்புகள் கிடைக்கவே வானொலி ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்ற எனது ஆர்வம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.

இதன் பிரகாரம் வானவில் என்ற நாமத்தை மாற்ற முடியாத நிலையிலும் சஞ்ஜீவனின் நினைவுகளை நிலைபெறச் செய்வதற்குமாக "Vanavil Media Network " நிறுவனத்தை ஆரம்பித்து www sanjeevaoli com என்கின்ற இணையத்தளத்தினூடாக முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகும் வகையில் சஞ்ஜீவ ஒலி என்கின்ற இணைய வானொலியை ஆரம்பித்துள்ளோம். எந்தவொரு பின்புலமும் இல்லாமல், எந்தவொரு அரசியல் நோக்கங்களும் இல்லாமல் முற்று முழுதாக பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு வானொலியே சஞ்ஜீவ ஒலியாகும்.

சஞ்ஜீவ ஒலி வானொலியானது எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமான சொத்தல்ல. இது பொதுவான ஒரு தமிழ் வானொலியாகும். "உலகெங்கும் தமிழிசை" என்கின்ற மகுடத்துடன் முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் இருபத்து நான்கு மணி நேரமும் ஒலிபரப்பாகும் சஞ்ஜீவ ஒலி தற்போது தொடரிசையாக பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் சஞ்சீவ ஒலியின் நேரடிக் கலையாக நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். அந்தவகையில் உலகெல்லாம் பரந்து வாழும் தமிழ் பேசும் உள்ளங்களாகிய உங்களின் மேலான ஆதரவுடன் நாம் சிகரம் தொடுவோம் என்று நம்புவதுடன், உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் கருத்துக்களை தற்காலிகமாக msenthuva @ yahoo com என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதுடன், 0094243246533 / 0094778092036 என்கின்ற எமது தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக நேரடியாக இணைந்துகொண்டும் தெரிவிக்கலாம்.
"எல்லைகள் தாண்டிய எமது பயணம் உங்களுடன்"

குறிப்பு- சஞ்ஜீவ ஒலி வானொலியினை ஆரம்பிக்கும் முயற்சியில் கூடவே இருந்து உதவிய, உதவுகின்ற நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் எப்போதும் நன்றி...நன்றி...நன்றி...